For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உச்சநீதிமன்றத்தின் கதவை நள்ளிரவில் தட்டி தூக்கில் இருந்து கடைசி நிமிடங்களில் தப்பியவர்கள்..

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: உச்சநீதிமன்ற வரலாற்றில் முதல் முறையாக மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் யாகூப் மேமனின் மனு மீதுதான் நள்ளிரவில் விசாரணை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இதற்கு முன்னர் 2 முறை தூக்கு தண்டனையை நிறுத்தக் கோரி இதேபோல் நள்ளிரவில் உச்சநீதிமன்றத்தில் விசாரணைகள் நடைபெற்றிருக்கின்றன.

தாம் பெற்ற பிள்ளைகளையே படுகொலை செய்த மங்கன்லால் பரேலா மற்றும் நிதாரி படுகொலை வழக்கின் குற்றவாளி சுரீந்தர் கோலி ஆகியோரது கடைசி நேர மனுக்களும்கூட நள்ளிரவில் உச்சநீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டியிருக்கிறது. அவர்களும் தூக்கில் இருந்து தப்பியுள்ளனர்.

மங்கன்லால் பரேலா வழக்கு

மங்கன்லால் பரேலா வழக்கு

மத்திய பிரதேசம் ஷிகோர் மாவட்டம் கனேரியா கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மங்கன்லால் பரேலா. இவர் கடந்த 2010ஆம் ஆண்டு ஜூன் 11-ந் தேதி தமது 5 மகள்களை கோடாரியால் வெட்டி படுகொலை செய்தார். இந்த குழந்தைகள் அனைவரும் 1 முதல் 6 வயது வரை உள்ளவர்கள். இந்த வழக்கில் 2011ஆம் ஆண்டு பிப்ரவரி 3-ந் தேதி மங்கன்லால் பரேலாவுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இதனை போபால் உயர்நீதிமன்றமும் உச்சநீதிமன்றமும் உறுதி செய்தன. இதன் பின்னர் மத்திய பிரதேச ஆளுநர் மற்றும் ஜனாதிபதியால் மங்கன்லால் பரேலாவின் கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

உச்சநீதிமன்றத்தில் நள்ளிரவு விசாரணை

உச்சநீதிமன்றத்தில் நள்ளிரவு விசாரணை

மங்கன்லாலுக்கு 2013ஆம் ஆண்டு ஏப்ரல் 9-ந் தேதியன்று ஜபல்பூர் மத்திய சிறையில் தூக்கு தண்டனை விதிக்கப்படும் என தேதி குறிப்பிடப்பட்டிருந்தது. அதற்கு முந்தைய நாள் ஏப்ரல் 8-ந் தேதி இரவு 11 மணியளவில் மங்கன்லால் வழக்கறிஞர்கள் தூக்குக்கு தடை விதிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தை நாடினர். இந்த இறுதி நேர மனு மீது நள்ளிரவில் விசாரணை நடத்தப்பட்டு மங்கன்லாலுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றுவதற்கு 5 மணிநேரத்துக்கு முன்பாக தடை விதிக்கப்பட்டது. இந்த தடை விதிக்கப்பட்ட விவரத்தை ஜபல்பூர் சிறைக்கு உச்சநீதிமன்றம் ஃபேக்ஸ் மூலம் அனுப்பி வைத்தது. இதனால் தூக்கில் இருந்து மங்கன்லால் பரேலா கடைசி நிமிடத்தில் உயிர் தப்பினார்.

சுரீந்தர் கோலி வழக்கு

சுரீந்தர் கோலி வழக்கு

டெல்லி நொய்டாவை அடுத்த நிதாரியில் 14 வயது சிறுமி ரிம்பா ஹல்தர் கொல்லப்பட்ட சம்பவம் கடந்த 2006-ம் ஆண்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தியபோது, சுரீந்தர் கோலி மற்றும் தொழிலதிபர் மொணீந்தர் சிங் பாந்தர் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் வீட்டருகே தோண்டிய போது ஏராளமான சிறுமி களின் எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப் பட்டன. அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தபோது, மொணீந்தர் சிங் பாந்தர் விடுவிக் கப்பட்டார். சுரீந்தர் கோலியின் தூக்கு தண்டனையை உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றங்கள் உறுதி செய்தன.

நள்ளிரவு விசாரணை

நள்ளிரவு விசாரணை

அவர் தாக்கல் செய்த கருணை மனுவை 2014ஆம் ஆண்டு ஜூலை 27-ந் தேதி ஜனாதிபதி நிராகரித்தார். இதனால் அவருக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் 9-ந் தேதி தூக்கு தண்டனையை நிறைவேற்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அதற்கு முந்தைய நாள் நள்ளிரவில் உச்சநீதிமன்றத்தை சுரீந்தர் கோலியின் வழக்கறிஞர்கள் நாடினர். ஹெச்.எல். தத்து, தவே தலைமையிலான பெஞ்ச் இந்த மனுவை விசாரித்து தூக்கு தண்டனையை நிறைவேற்ற தடை விதித்தது. இதனால் கோலி தூக்கில் இருந்து தப்பினார்.

யாகூப் மேமன் வழக்கு

யாகூப் மேமன் வழக்கு

இந்த இரு வழக்குகளைத் தொடர்ந்து யாகூப் மேமனுக்கு ஜூலை 30-ந் தேதி தூக்கு என அறிவிக்கப்பட்டிருந்தது. இதை நிறுத்தக் கோரி ஜூலை 29-ந் தேதியன்று உச்சநீதிமன்றத்தில் நள்ளிரவில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு தலைமை நீதிபதி தத்து வீட்டில் தாக்கல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து 3 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் அமைக்கப்பட்டு 90 நிமிடங்கள் விசாரணை நடத்தப்பட்டது. ஆனால் யாகூப் மேமனை தூக்கிலிடுவதற்கு உச்சநீதிமன்றம் தடை விதிக்கவில்லை. அதிகாலை 4.58 மணிக்கு உச்சநீதிமன்றம் தடை விதிக்க மறுத்து தீர்ப்பளித்தது. இதனைத் தொடர்ந்து சில மணிநேரங்களில் காலை 6.35 மணிக்கு யாகூப் மேமன் தூக்கிலிடப்பட்டார். உச்சநீதிமன்ற வரலாற்றில் நள்ளிரவில் 3வது முறையாக தூக்கு தண்டனையை நிறுத்தக் கோரும் மனு மீது விசாரணை நடைபெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
While there is a lot that is being spoken about the pre-dawn hearing by the Supreme Court in the Yakub Memon case, this is however not the first time something to this effect has taken place. In the past there have been two such instances when the Supreme Court has opened its doors for death row convicts.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X