முஸ்லிம்கள் மக்கள் தொகை 'பூதாகரமாக' உயர்கிறதா? மறைக்கப்பட்ட சில உண்மைகள்
டெல்லி: சிவசேனாவின் அதிகாரப்பூர்வ ஏடான சாம்னாவில், "எதிர்காலத்தில் இந்தியாவில் முஸ்லிம்கள் எண்ணிக்கையானது இந்தோனேசியா மற்றும் பாகிஸ்தானை விட அதிகரித்து இந்து தேசத்தில் சமூக சமனற்ற நிலையை உருவாக்கி விடும் என்று எழுதப்பட்டிருந்தது.
இதற்கு ஆதாரமாக பி.இ.டபிள்யூ என்ற சர்வதேச அமைப்பின் 'மதங்களின் எதிர்காலம்" என்ற ஆய்வறிக்கையை சாம்னா சுட்டிக் காட்டியிருந்தது... அந்த அறிக்கையில்,
முஸ்லிம்கள் மக்கள் தொகையானது 2010ஆம் ஆண்டில் 14% உள்ளது. 2050ஆம் ஆண்டு 18.2% ஆக அதிகரித்திருக்கும். அதாவது 31.1 கோடியாக இருக்கும். இது இந்தோனேசியா மற்றும் பாகிஸ்தானை விட அதிகமானது என்று கூறப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் சாம்னா ஏடு குறிப்பிடாமல் மறைத்தது இதே அறிக்கையில் இடம்பெற்றுள்ள இந்துக்களின் மக்கள் தொகை அதிகரிப்பு குறித்த விவரத்தை.. இது பற்றி அறிக்கையில் இடம்பெற்றுள்ளதாவது:
2050ஆம் ஆண்டில் இந்தியாவில் இந்துக்களின் மக்கள் தொகை 120 கோடியாக இருக்கும்..அதாவது 77% ஆக இருக்கும் என்பதுதான்..
2010 ஆம் ஆண்டு இந்துக்களின் மக்கள் தொகை 80%.. மொத்தம் 97.3 கோடி பேர்... 2011ஆம் ஆண்டு புள்ளி விவரம் எடுக்கப்பட்டும் அது வெளியிடப்படாமல் இருக்கிறது..
மக்கள் தொகை அதிகரிப்பு என்று கருத்தரிப்பு விகிதம், வாழ்நாளில் சராசரியாக பெற்றுக் க்ள்ளும் குழந்தைகளின் எண்ணிக்கை ஆகியவற்றை பொறுத்ததது.
இந்தியாவில் 2001ஆம் ஆண்டு முஸ்லிம் பெண்களின் கருத்தரிப்பு விகிதம் என்பது 4.1% ஆக இருந்தது.. இது 2010ஆம் ஆண்டில் 3.2% ஆக குறைந்துள்ளது. 2050ஆம் ஆண்டில் இது 2.1% ஆக குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது என்கிறது இந்த அறிக்கை.
இந்து பெண்களின் கருத்தரிப்பு விகிதமானது 2010ஆம் ஆண்டு 2.5% ஆக இருக்கிறது. இது 2050ஆம் ஆண்டில் 1.9% ஆக இருக்கும் என்றும் சுட்டிக்காட்டுகிறது இந்த அறிக்கை..
பலதார மணத்தைப் பொறுத்தவரையில் புத்த மதத்தினர் தான் அதிக அளவிலான திருமணங்களை செய்து கொள்கின்றனர். இந்துக்களில் 1.7%; முஸ்லிம்களில் 2.5% பேர் பலதார மணம் புரிவோர் எனில் புத்த மதத்தில் 3.4% பேர் என்று இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இருப்பினும் பலதார மணம் என்பது மதத்தோடு தொடர்பில்லை என்கின்றனர் கல்வியாளர்கள்.
'கருத்தடை' செய்து கொள்வதில் ஜைன மதத்தினரே முதலிடத்தில் உள்ளனர். ஜைனர்கள் 75%, புத்த மதத்தினர் 68%. சீக்கியர்கள் 67%, கிறிஸ்தவர்கள், இந்துக்கள் 58%, முஸ்லிம்கள் 46% கருத்தடை செய்து கொள்கின்றனர்.
இந்தியாவில் உள்ள 7 மதங்களில் முஸ்லிம்களே மிகவும் ஏழ்மையானவர்கள்.. சீக்கியர்களே மிகவும் பணக்காரர்களாக இருக்கிறார்கள் என்கிறது 2013ஆம் ஆண்டு தேசிய அளவிலான ஆய்வறிக்கை.