மழையில்லாமல் விவசாயம் அழிய காரணம் இவைதான்... ஆய்வறிக்கை வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்கள்
வாகனப்புகை, காற்றில் கலக்கும் இரசாயன வெளியேற்றம் இவையே மழையின்றி வறட்சி ஏற்பட, விவசாயம் அழிய முதன்மையான காரணிகள் என்று ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.
டெல்லி: இந்தியாவில் வறட்சி நிலவ அல்லது கனமழை கொட்டி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு விவசாயம் அழிய, தண்ணீர்ப் பஞ்சம் ஏற்பட முக்கியமான காரணிகள் குறித்து, சூழல் ஆய்வறிக்கை மூலம் விரிவான தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்திய பருவநிலை மாற்றங்களுக்கு வாகனப் புகையின் தாக்கமும், காற்றில் கலக்கும் ரசாயன வெளியேற்றங்களும் அடிப்படையாக அமைந்துள்ளன என்று ஆய்வறிக்கை உறுதி செய்துள்ளது.
புனேயைச் சேர்ந்த வெப்ப மண்டல இந்திய வானிலை ஆய்வுக் கழகம், பருவநிலை ஆய்வாளர் ஆர்.கிருஷ்ணன் தலைமையில் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. அந்த ஆய்வில் அடுத்த நூற்றாண்டில் பசுமை இல்ல வாயுக்களினால் ஏற்படும் பருவநிலை விளைவுகள் குறித்து பகீர் உண்மைகள் வெளியாகியுள்ளன.
50 ஆண்டுகளாக வலுவிழக்கும் பசுமை இல்ல வாயுக்கள்
‘கிளைமேட் டைனமிக்ஸ்' என்ற இதழில் இந்த ஆய்வின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. பசுமை இல்ல வாயுக்கள், காற்றில் கலக்கும் வாகனப்புகை, ரசாயன வெளியேற்றங்கள், காடுகளில் ஏற்படும் மாற்றங்கள் ஆகியவை பருவநிலையை கடந்த 50 ஆண்டுகளாக பாதித்து வருகிறது என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூசி,வாகனப் புகை ரசாயன வெளியேற்றம்
கணினி மாதிரி ஆய்வில், பசுமை இல்ல வாயுக்கள் காற்றில் தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. ஆனால் அதைவிட காற்றில் கலக்கும் தூசிகள், வாகனப்புகை மற்றும் ரசாயன வெளியேற்றம், விவசாயப் பயிர் எச்சங்களை எரித்தல் உள்ளிட்ட காரணிகளே அதிக தாக்கங்களை ஏற்படுத்துவதாகத் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
புதிய மாதிரியை ஏற்படுத்தும் வானிலை மையம்
நடப்பு ஆண்டில் வானிலை முன்னறிவிப்புகளுக்கு புதுமைப்படுத்தப்பட்ட மாதிரியை இந்திய வானிலை ஆய்வு மையம் பயன்படுத்துகிறது. இதன் மூலம் புவிவெப்பமடைதல், பருவ நிலை மாற்றங்களுக்கான அரசுகளுக்கிடையேயான குழுவின், அறிக்கைகளுடன் இந்திய வானிலை அறிக்கையும் ஒரு பகுதியாகவுள்ளது.
பூமியை மறைக்கும் தூசி மண்டலம்
சூரிய ஒளிக்கற்றைகளிலிருந்து பெரிய தூசி மண்டலம் பூமியை மறைத்து வருகிறது. இதனால் நிலம் மற்றும் கடல் வெப்ப நிலையில் மாற்றங்கள் ஏற்படுகிறது. இந்த இரண்டு வெப்ப அளவுகளுக்கு இடையேயுள்ள வித்தியாசம்தான் பருவநிலையைத் தீர்மானிக்கிறது, தற்போது இது பலவீனமடைந்துள்ளது என்கிறது ஆய்வு.