சந்திரபாபு நாயுடுவை நடுரோட்டில் சுட்டுக் கொல்லனும்.. ஜெகன் மோகன் பேச்சால் பரபரப்பு
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை நடுரோட்டில் நிற்க வைத்து சுட்டுக் கொன்றாலும் தவறில்லை என்று ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்தார்.
அமராவதி: தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை சாலையில் நிற்க வைத்து சுட்டுக் கொன்றாலும் தவறில்லை என்று ஜெகன்மோகன் ரெட்டி கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சட்டசபை தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி சார்பில் கர்னூல் மாவட்டம் நந்தியால் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் பூமா ரெட்டி. இவர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்தார்.
இந்த நிலையில் இவர் காலமாகி விட்டார். இதனால் நந்தியால் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. ஜெகன்மோகன் ரெட்டி கட்சிக்கும், சந்திரபாபு நாயுடு கட்சிக்கு இடையே இங்கு கடும் போட்டி நிலவி வருகிறது.
நந்தியாலில் பொதுக் கூட்டம்
கடந்த வியாழக்கிழமை ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் சார்பில் நந்தியால் தொகுதியில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. அதில் ஜெகன் மோகன் ரெட்டி பேசியபோது, மாமனார் என்டிஆரின் புகைப்படங்களை தேர்தலின் போது பயன்படுத்தி ஓட்டுகளை வாங்கிவிட்டு தற்போது வாக்குறுதிகளை சந்திரபாபு நாயுடு நிறைவேற்ற தவறிவிட்டார்.
சுட்டுக் கொல்லுங்கள்
மக்களை ஏமாற்றியதற்காக சந்திரபாபு நாயுடுவை நடுரோட்டில் சுட்டுக் கொன்றாலும் தவறில்லை என்று பேசினார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவரது கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த தெலுங்கு தேசம் கட்சியினர் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் ஜெகன்மோகனை கைது செய்ய வேண்டும் என்று போலீஸில் புகார் அளித்துள்ளனர்.
சப்பைக்கட்டு ரோஜா
ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ரோஜா கூறுகையில், சந்திரபாபு நாயுடுவை சுட்டுக் கொல்வது என்றால் அவரை நந்தியால் தேர்தலில் அரசியல் ரீதியாக வீழ்த்துவதைத்தான் குறிக்கிறது என்று சப்பைக் கட்டு கட்டியுள்ளார்.
கைதாவாரா?
ஆனால் மாநில முதல்வரை நடு ரோட்டில் வைத்து சுட்டுக் கொல்ல வேண்டும் என்று கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் ஜெகன் பேசியுள்ளதால் அவர் எந்த நேரத்திலும் கைது செய்யலாம் என்று தெரிகிறது.