சுப்ரீம் கோர்ட் வாரன்ட் நிராகரிப்பு.. நீதிபதி கர்ணன் வீட்டு முன் 100க்கும் மேற்பட்ட போலீஸ் குவிப்பு!
கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் வீட்டு முன் 100க்கும் மேற்பட்ட போலீஸ் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கொல்கத்தா: கொல்கத்தா ஹைகோர்ட் நீதிபதி கர்ணனுக்கு எதிராக உச்சநீதிமன்றம் பிறப்பித்த பிடி வாரண்ட்டை ஒப்படைப்பதற்காக மேற்கு வங்காளம் மாநில போலீஸ் டி.ஜி.பி. தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் சென்றது பரபரப்பை கிளப்பியுள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த கர்ணன், கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதியாக இடமாற்றம் செய்யப்பட்டார். இவர் பிரதமர் அலுவலகம், சட்டத்துறை அமைச்சகம், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்டோருக்கு சென்னை நீதிபதிகள் குறித்து புகார் கடிதங்களை அனுப்பினார்.
இதனை உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்காக பதிவு செய்து விசாரணை செய்து வருகிறது. இந்த வழக்கில் ஆஜராக நீதிபதி கர்ணனுக்கு இரண்டு முறை உத்தரவிடப்பட்டது. ஆனால், அவர் ஆஜராகவில்லை.
இந்நிலையில், இந்த வழக்கு கடந்த மார்ச் 10ம் தேதி தலைமை நீதிபதி கேஹர் மற்றும் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா உள்ளிட்ட 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி கர்ணனுக்கு எதிராக ஜாமினில் வெளிவரக்கூடிய வாரன்ட் பிறப்பித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நீதிபதி கர்ணன், சுப்ரீம் கோர்ட்டிற்கு எதிராக உத்தரவு பிறப்பிப்பேன் எனக்கூறினார்.
இந்நிலையில், இன்று நீதிபதி கர்ணன் வீட்டிற்கு மேற்கு வங்க போலீஸ் டி.ஜி.பி., தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் சென்று உச்சநீதிமன்ற வாரன்ட்டை கொடுத்தனர். அப்போது இந்த வாரன்ட்டை நான் நிராகரிக்கிறேன் என்று அவர் கூறினார்.
இதனிடையே உச்சநீதிமன்றத்திற்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார் நீதிபதி கர்ணன். அதில், உச்சநீதிமன்றத்தின் நடவடிக்கையால் தனக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாகவும், அதற்கு நஷ்ட ஈடாக ரூ.14 கோடியை வழங்க வேண்டும் என்றும், கேட்டுக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. நீதிமன்றம் அனுப்பிய பிடிவாரன்ட் கொடுக்க டிஜிபி தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.