'எங்களுடைய காயத்தில் உப்பை தேய்த்துவிட்டனர்’... நிர்பயா பெற்றோர் ஆவேசம்
டெல்லி: முகேஷ் சிங்கின் கருத்துக்கள் எங்கள் காயத்தில் உப்பு தேய்ப்பது போல் அமைந்துள்ளது என நிர்பயாவின் பெற்றோர் வருத்தம் தெரிவித்துள்ளனர். மேலும், உடனடியாக முகேஷ் சிங்கை தூக்கிலிட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் 16ந்தேதி தலைநகர் டெல்லியில் தனது நண்பருடன் சினிமாவுக்குச் சென்று திரும்பிய மருத்துவ மாணவி 6 பேர் கொண்ட கும்பலால் ஓடும் பேருந்தில் கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்டார். பலாத்காரத்திற்குப் பின்னர் அக்கும்பலால் தாக்கப் பட்ட மாணவி சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை உண்டாக்கியது இச்சம்பவம். தலைநகரில் நடந்த இச்சம்பவத்தால் உலக அரங்கில் இந்தியாவில் பெண்களின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுந்தது.
விரைந்து செயல்பட்ட போலீசார் இந்த வழக்கில் தொடர்புடைய 6 பேரையும் கைது செய்தனர். குற்றவாளிகளில் 5 பேர் திஹார் சிறையிலும், ஒரு சிறுவன் சீர்த்திருத்தப் பள்ளியிலும் அடைக்கப்பட்டனர். சிறையில் இருந்தபோதே குற்றவாளி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.
மீதமுள்ளவர்களில் மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட பேருந்தை ஓட்டிய டிரைவர் முகேஷ் சிங் என்பவர் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், இங்கிலாந்தை சேர்ந்த சினிமா பெண் தயாரிப்பாளர் லெஸ்லீ உத்வின் மற்றும் பி.பி.சி. குழுவினர் இந்த பலாத்கார சம்பவத்தை ‘இந்தியாவின் மகள்' என்ற தலைப்பில் ஆவணப்படமாக எடுத்துள்ளனர்.
இதற்காக திஹார் சிறையில் அனுமதி பெற்று முகேஷ் சிங்கிடம் அவர்கள் பேட்டி எடுத்தனர். வருகிற 8-ந் தேதி மகளிர் தினத்தையொட்டி இந்த ஆவணப்படம் வெளியிடப்படுகிறது.
தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட கைதி பேட்டி கொடுத்திருப்பது பெரும் சர்ச்சையை உண்டாக்கியிருக்கிறது. இந்த தகவலை அறிந்த மத்திய அரசு சிறை அதிகாரிகளுக்கு கண்டனம் தெரிவித்தது. இது தொடர்பாக விளக்கம் அளிக்க சிறை அதிகாரிகளுக்கு மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தவிட்டுள்ளார்.
இந்நிலையில் இங்கிலாந்து படக்குழுவினருக்கு தூக்கு தண்டனை கைதி முகேஷ் சிங் பேட்டி அளித்தபோது, பாலியல் பலாத்காரம், பெண்கள் தொடர்பாக கூறிய கருத்துக்கு, பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக அம்மாணவியின் தந்தை வெளிநாட்டு செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், ‘முகேஷ் சிங் உடனடியாக தூக்கிலிடப்பட வேண்டும். அதிகாரிகள் பேட்டி அளிப்பதற்கு அனுமதி அளித்திருக்க கூடாது. எனது மகளுக்கு நடந்தது அனைத்து மறக்க முடியாதது, அவர்கள் மீண்டும் எங்களது காயத்தில் உப்பை தேய்த்துவிட்டனர்.
பாலியல் வன்கொடுமையில் இருந்து காத்துக்கொள்ள போராடிய என்னுடைய மகள் தொடர்பாக இவ்வளவு வெறுப்பான கருத்துக்களை தெரிவித்துள்ளான். இதுபோன்ற நாட்டில் வாழ்வதில் எனக்கு வருத்தமாக உள்ளது.
நாட்டில் உள்ள அனைத்து பெண்களையும் அவன் அவமதித்துவிட்டான். சிறையில் தண்டனை அனுபவித்தும் அவன் திருந்தவில்லை. பாடம் கற்றுக் கொள்ளவில்லை. சிறையில் தூக்கு தண்டனை கைது பேட்டி எடுக்கப்பட்டது தொடர்பாக விசாரிக்கப்பட வேண்டும்' என அவர் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.