கர்நாடக அமைச்சர் சிவக்குமார் வீட்டில் ஐடி ரெய்டிற்கு காரணம் இதுதானாம்
கர்நாடக அமைச்சர் சிவக்குமார் வீட்டில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்துவதற்குக் காரணம் குஜராத்தில் இருந்து 44 காங்கிரஸ் எம்எல்ஏக்களை கொண்டு வந்து பாதுகாத்து வைத்திருந்ததுதானாம்.
பெங்களூரூ; இன்று காலை 7 மணி முதல் கர்நாடக எரிசக்தித் துறை அமைச்சர் சிவக்குமார் வீட்டில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தி வருவதற்கான காரணங்கள் தற்போது வெளியாகியுள்ளன.
குஜராத் மாநிலத்தில் வரும் 8ம் தேதி ராஜ்ய சபா எம்பி தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் பாஜக வெற்றி பெற காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஒவ்வொருவருக்கும் ரூ. 15 கோடி பேரம் பேசப்பட்டது. இதனால் உஷாரான காங்கிரஸ் தலைமை 44 எம்எல்ஏக்களை பெங்களுரூவில் உள்ள ஈகிள்டன் கோல்ப் ரிசார்ட்டில் தங்க வைத்துள்ளது.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் இன்று ஈகிள்டன் கோல்ப் ரிசார்ட் ஐடி ரெய்டு நடத்தி வருகிறது. மேலும் மற்றும் கனகபுரா மற்றும் சதாசிவநகரில் உள்ள அம்மாநிலத்தின் எரிசக்தித் துறை அமைச்சர் சிவக்குமார் வீட்டில் காலை 7 மணி முதல் ரெய்டு நடைபெற்று வருகிறது. மேலும், அமைச்சரின் சகோதரர் சுரேஷ் வீட்டிலும் ரெய்டு நடைபெற்று வருகிறது. சுரேஷின் நண்பர் வீடுகளிலும் ரெய்டு நடைபெற்று வருகிறது.
ஈகிள்டன் கோல்ப் ரிசார்ட்டில் 10க்கும் மேற்பட்ட ஐடி அதிகாரிகளும் அமைச்சர் வீட்டில் 20க்கும் மேற்பட்ட ஐடி அதிகாரிகளும் சோதனை நடத்தி வருகின்றனர். ரெய்டு நடக்கும் இடங்களில் மத்திய பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் கர்நாடகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட நெருக்கடியைப் போக்க 44 எம்எல்ஏக்களையும் பெங்களூரு கொண்டு வந்து தங்க வைப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அமைச்சர் சிவக்குமார்,செய்துள்ளார் என்பதே பாஜக அரசு ஐடி துறையை அவர் மீது ஏவி விட்டதற்கு முக்கிய காரணம்.