சபரிமலையில் ஸ்பெஷல் போஸ்ட் ஆபிஸ்… பக்தர்களின் கடிதங்கள் ஐயப்பனுக்கு டெலிவரி
சபரிமலை: சொந்த பந்தங்கள் உறவினர்களுக்கு கடிதம் எழுதி தபால் மூலம் அனுப்புவோம். இப்போது கூரியர் வந்துவிட்டதால் அநேகம்பேர் கடிதங்களையும், பார்சல்களையும் அனுப்புகின்றனர்.
ஆனால் சபரிமலை ஐயப்பசாமி கோவிலில் சிறப்பாக ஒரு தபால் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. நவம்பர் மாதம் மாதம் முதல் ஜனவரி மாதம் முடிய இந்த போஸ்ட் ஆபிஸ் திறந்திருக்கும் விசு காலத்தில் பத்து நாட்கள் திறந்திருக்கும்.
பக்தர்கள் வீட்டு விசேசங்கள், திருமண பத்திரிக்கை, கடை திறப்பு ஆகியவைகளுக்காக பத்திரிக்கைகளை ஐயப்பனின் ஆசிவேண்டி அனுப்பிவைக்கின்றனர்.
வாரத்திற்கு 6 நாட்கள் காலை 8 மணி முதல் இரவு 8 மணிவரை இந்த போஸ்ட் ஆபிஸ் திறந்திருக்கும். இந்த தபால் நிலையத்தின் தலைமை ஊழியராக 23 வயதான ஜி.பிரகாஷ் வேலை செய்கிறார்.
தமிழகம், கர்நாடகா,ஆந்திரபிரதேசத்தில் இருந்துதான் ஏராளமான கடிதங்கள் ஐயப்பனுக்கு வருகிறது என்கிறார் பிரகாஷ். ஐயப்பனின் பக்தரான பிரகாஷ் இந்த போஸ்ட் ஆபிசில் பணிபுரிவதை தனது கடமையாக நினைப்பதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார் பிரகாஷ்.
98 கோடி வருமானம்
சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டலபூஜைக்காக நடை திறக்கப்பட்டு 28 நாட்களில் மொத்த வருமானம் ரூ.98 கோடியை தாண்டியது. இது கடந்த ஆண்டைவிட ரூ.13 கோடி அதிகமாகும்.
10 மணிநேரம் தரிசனம்
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த நவம்பர் 16ஆம் தேதி மாலை திறக்கப்பட்டது. இந்த ஆண்டு நடை திறந்தது முதல் பக்தர்கள் அதிக அளவில் வந்த வண்ணம் உள்ளனர். இதனால் நடை திறந்த சில தினங்களில் 10 மணி நேரம் வரை பக்தர்கள் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்யும் நிலை ஏற்பட்டது.
தரிசன நேரம்
பக்தர்களின் வருகை அதிகரித்ததை தொடர்ந்து, சபரிமலையில் தரிசன நேரமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. தினமும் காலை 4 மணிக்குப் பதிலாக 1 மணி நேரம் முன்னதாக 3 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. பகல் 1.30 மணிக்கு பதிலாக 1.45 மணிக்கு நடை சாத்தப்படுகிறது. மாலை 4 மணிக்குப் பதிலாக 3 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. இரவு 11 மணிக்குப் பதிலாக 11.45 மணிக்கு நடை சாத்தப்படுகிறது.
100 கோடி வருமானம்
பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளதால் சபரிமலை கோயில் வருமானமும் இந்த ஆண்டு அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் (14ம் தேதி) வரை கோயில் மொத்த வருமானம் ரூ.98 கோடியை தாண்டி உள்ளது. கடந்த வருடம் இதே நாளில் ரூ.85 கோடிக்கு மேல் வருமானம் கிடைத்தது.
பிரசாத விற்பனை
அரவணை பாயசம் மூலம் ரூ.39.50 கோடியும், உண்டியல் மூலம் ரூ.35 கோடியும், அபிஷேகம் மூலம் ரூ.1.10 கோடியும், அப்பம் விற்பனை மூலம் ரூ.7.35 கோடியும் வருமானம் கிடைத்துள்ளது. இன்று அல்லது நாளை கோயில் மொத்த வருமானம் ரூ.100 கோடியை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆன்லைன் சேவை கட்டணம்
சபரிமலை ஐயப்பன் கோயிலில் தரிசனம் செய்ய முன்பதிவு செய்யும் வசதியும், பூஜை நடத்தவும், பிரசாதம் வாங்கவும் ஆன்லைனில் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி ஏராளமான பக்தர்கள் ஆன்லைனில் பூஜைக்கு முன்பதிவு செய்தும், பிரசாதங்களையும் வாங்கி வருகின்றனர். பூஜை நடத்துவதற்கும், பிரசாதம் வாங்கவும் சேவை கட்டணமாக 100 வசூலிக்கப்பட்டு வந்தது.
ரூ.25 ஆக குறைப்பு
சபரிமலையில் அர்ச்சனை செய்ய 20 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஆனால் இதற்கு சேவை கட்டணமாக 100 வசூலிக்கப்பட்டு வந்தது. இதற்கு பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். சேவை கட்டணத்தை குறைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து சேவை கட்டணத்தை 100ல் இருந்து 25 ஆக தேவசம்போர்டு குறைத்துள்ளது. இந்த கட்டண குறைப்பை பக்தர்கள் வரவேற்றுள்ளனர்.