10 ஆண்டுகளில் 57 பேரை கொலை செய்த உ.பி. "சல்மான் கான்"
லக்னோ: உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சல்மான் கான் என்பவர் 10 ஆண்டுகளில் 57 பேரை கொலை செய்துள்ளார்.
உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் சல்மான் கான்(26). அவர் தனக்கு 16 வயது இருக்கையில் முதன்முதலாக கொலை செய்துள்ளார். ரோஹில்கந்தைச் சேர்ந்த சைமார் கோஷ்டியின் தலைவரான சல்மான் கான் கடந்த 10 ஆண்டுகளில் 57 பேரை கொலை செய்துள்ளார்.
அண்மையில் கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட சல்மான் போலீசாரிடம் தான் செய்த கொலைகள் பற்றிய விவரங்களை கொஞ்சம் கூட வருத்தம் இன்றி பெருமையாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து பரேலி சர்க்கிள் இன்ஸ்பெக்டர் ஆசித் ஸ்ரீவஸ்தவா கூறுகையில்,
சல்மானிடம் விசாரணையை துவங்கியதும் அவர் தான் செய்த கொலைகள் பற்றிய விவரங்களை தெரிவித்தார். பரேலி மாவட்டத்தில் உள்ள எந்த பகுதியின் பெயரை தெரிவித்தாலும் ஆமாம் நான் அங்கு அவரை கொலை செய்தேன் இவரை கொலை செய்து கொள்ளையடித்தேன் என்று கூறுகிறார்.
அவரது கும்பலைச் சேர்ந்தவர்கள் ஆட்களை கொலை செய்து அவர்களின் வீட்டில் உள்ள நகை, பணத்தை கொள்ளையடிக்கின்றனர். அவரது கும்பலைச் சேர்ந்த அனைவரும் படிப்பறிவு இல்லாதவர்கள் என்றார்.
சல்மானுடன் சேர்த்து கைது செய்யப்பட்ட முகமது ஹனிப்(21) என்பவர் பதாவ்ன் பகுதியில் 13 பேரை கொலை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.