பஞ்சாப் முதல்வருக்கு கனடாவிலிருந்து வந்த கொலை மிரட்டல் வீடியோ! போலீசார் தீவிர விசாரணை
பஞ்சாப் மாநில முதல்வருக்கு கொலை வீடியோ வந்துள்ளதால் அவருக்கு பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டு உள்ளது.
சண்டிகர்: பஞ்சாப் மாநில முதல்வரை கொலை செய்யப்போவதாக வெளியான மிரட்டல் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஆட்சி நடக்கிறது. மாநில முதல்வராக அமரீந்தர் சிங் உள்ளார். முதல்வர் அமரீந்தர் சிங்கிற்கும் லூதியானா தொகுதி எம்.பி.,யான ரவ்நீத் சிங்கிற்கும் எதிராகக் கொலை மிரட்டல் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. இது அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வீடியோவில் முதல்வர் அமரீந்தர் சிங்கையும், ரவ்நீத் சிங்கையும் கீழ்தர விமர்சித்து சிலர் பேசுகின்றனர். பின்னர் அவர்கள் இருவருக்கும் கொலை மிரட்டல் விடுக்கின்றனர். இந்த வீடியோக்கள் கனடாவில் எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
கனடா நாட்டின் பாதுகாப்பு துறை அமைச்சர் ஹர்ஜித் சிங் இந்தியா வந்தபோது அவருக்கு தகுந்த மரியாதை அளிக்காததாலும், சீக்கியர்களுக்கு எதிராகவே செயல்பட்டு வந்ததாலும் வீடியோவில் உள்ள நபர்கள், முதல்வரை கொலை செய்ய போவதாகத் தெரிவிக்கின்றனர்.
இந்த வீடியோவின் பின்ணனியில் கனடா என ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது. மேலும் காலிஸ்தான் தீவிரவாதியான பிந்தர்வாலேவின் புகைப்படமும், அந்த வீடியோ பிண்ணனியில் உள்ளது. இதனால், இந்த வீடியோ கனடாவில் எடுக்கப்பட்டதாக இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது.
இது தொடர்பாக பஞ்சாப் போலீசார் வழக்கு பதிவு மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.