உ.பி. கொடுத்த தைரியம்.. கர்நாடக சட்டசபை தேர்தலிலும் முஸ்லிம்களுக்கு சீட் இல்லை: கைவிரித்த எடியூரப்பா
பெங்களூர்: உத்தரபிரதேசத்தில் ஒரு முஸ்லிம் வேட்பாளரையும் நிறுத்தாமல் பாஜக அமோக வெற்றி பெற்றதை அடிப்படையாக கொண்டு கர்நாடகாவிலும் அதே ஃபார்முலாவை கையில் எடுக்கிறது பாஜக.
பாஜக மாநில தலைவர் எடியூரப்பா இன்று அளித்த பேட்டியில் "மைனாரிட்டி அடையாளத்தை முன்னிருத்தி வாக்குகள் கேட்பதில் பாஜகவுக்கு நம்பிக்கையில்லை" என கூறியுள்ளார்.
அவர் போலி மதசார்பின்மை பேசும் கட்சி பாஜக இல்லை என்ற அர்த்தத்தில் அதை கூறியதாக தெரிவித்தாலும், உ.பி பாணியில் கர்நாடகாவிலும் முஸ்லிம்களுக்கு ஒரு சீட்டும் கொடுக்காமலேயே அடுத்த வருடம் நடைபெற உள்ள பேரவை தேர்தலை பாஜக சந்திக்க திட்டமிட்டுள்ளதாகவே அவரது பேச்சு அமைந்துள்ளது.
நாங்கள் வளர்ச்சியை பற்றி மட்டுமே பேசி வாக்கு கேட்போமே தவிர சிறுபான்மையினரை முன்னிருத்தி வாக்கு கேட்கப்போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார். வெற்றி பெற தகுதியான வேட்பாளரைத்தான் கணக்கில் கொள்வோமே தவிர அவர் எந்த மதம் என்று பார்க்கப்போவதில்லை எனவும் கூறியுள்ளார்.