அருந்ததி ராயை ராணுவ ஜீப்பில் கட்டுங்கள்.. பாஜக எம்.பி., டுவிட்டால் சர்ச்சை
பிரபல எழுத்தாளர் அருந்ததி ராயை ராணுவ ஜீப் முன்பு கட்டுங்கள் என்று பா.ஜ.க. எம்.பி.யும் பாலிவுட் நடிகருமான பரேஷ் ராவல் கூறியுள்ளார்.
டெல்லி: காஷ்மீரில் கிளர்ச்சியாளர்களை ராணுவ ஜீப்பில் கட்டியதற்கு பதிலாக, பிரபல எழுத்தாளர் அருந்ததி ராயை கட்ட வேண்டும் என பா.ஜ.க. எம்.பி.யும் பாலிவுட் நடிகருமான பரேஷ் ராவல் கூறியுள்ளது சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில மாதங்களாக காஷ்மீரில் ராணுவத்தினருக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையிலான பிரச்சனை தீவிர அடைந்து வருகிறது. ராணுவத்தின் மீது கல்லெறிந்த இளைஞர்களை பிடித்த ராணுவம், அதில் ஒருவரை ஜீப்பில் கட்டி இழுத்துச் சென்று பாதுகாப்பு கேடையமாக பயன்படுத்தியது. இதற்கு பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், புக்கர் பரிசு வென்ற எழுத்தாளரும், சமூக ஆர்வலருமான அருந்ததி ராயை, கிளர்ச்சியாளர்களுக்கு பதிலாக ஜீப்பில் கட்டி இழுத்து செல்ல வேண்டும் என பா.ஜ.க. எம்.பி.யும் பாலிவுட் நடிகருமான பரேஷ் ராவல் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ளார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. 3000 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அவரது கருத்துக்கு ரீ டிவிட் செய்துள்ளனர்.
காஷ்மீர் மக்கள் பற்றியும், கிளர்ச்சியாளர்கள் பற்றியும் தொடர்ந்து அருந்ததி ராய் சுட்டிக் காட்டி வருகிறார். இந்நிலையில் அருந்ததி ராயை ராணுவ ஜீப் முன்பு கட்டுங்கள் என்று கூறியுள்ளார் பரேஷ்.
Instead of tying stone pelter on the army jeep tie Arundhati Roy !
— Paresh Rawal (@SirPareshRawal) May 21, 2017