காங்கிரஸ் தலைவராகிறார் ராகுல்... திக்விஜய்சிங்கின் 'ரிட்டையர்டு' பேச்சில் சூசகம்!!
டெல்லி: காங்கிரஸில் உள்ள என்னைப் போன்ற மூத்த தலைவர்கள் ஓய்வு பெற வேண்டிய நேரம் வந்துவிட்டது; இது இளைஞர்களின் சகாப்தம் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் திக்விஜய் சிங் அதிரடியாக தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் தலைவராக ராகுல் பதவியேற்க உள்ளதைத்தான் திக்விஜய்சிங் மறைமுகமாக குறிப்பிடுவதாகவும் கூறப்படுகிறது.
டெல்லியில் காங்கிரஸ் சார்பில் நாளை நடைபெறும் விவசாயிகள் பேரணிக்கான ஏற்பாடுகள் குறித்து ஆலோசிப்பதற்காக ஹரியாணா மாநில காங்கிரஸ் தலைவர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் திக்விஜய் சிங் பேசியதாவது:
நான், அகமது படேல் உள்பட பல்வேறு தலைவர்கள், 33-இல் இருந்து 38 வயதுக்குள் மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர்களாக பொறுப்பேற்றோம். இப்போது இளைஞர்களுக்கான நேரம் வந்துள்ளது.
பழைய இலைகள் உதிர்ந்து, புது இலைகள் முளைப்பது இயற்கையின் நியதியாகும். எனவே இளைஞர்களின் தலைமை வரும்; இந்த நாட்டை வழிநடத்தும்.
இவ்வாறு திக்விஜய்சிங் கூறினார்.
காங். தலைவர் ராகுல்?
56 நாள் ஓய்வில் சென்றிருந்த காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, வியாழக்கிழமை நாடு திரும்பினார். காங்கிரஸ் தலைவராக அவர் பதவியேற்கலாம் என பேச்சு எழுந்துள்ள நிலையில், திக்விஜய் சிங் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.