கட்சியை காப்பாற்ற ராகுல் காந்தியை தியாகம் செய்யுமா காங்கிரஸ்?
டெல்லி: நடந்து முடிந்த 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தியின் அரசியல் எதிர்காலத்தை நோக்கி கேள்வி எழுப்புகின்றன.
வலுவான எதிர்க்கட்சி தலைவர் இல்லை என்பதே பாஜகவின் அபார வெற்றிகளுக்கு காரணம் என்று ராகுலை நோக்கி கை நீட்டுகிறார்கள், அரசியல் பண்டிதர்கள். அது உண்மை என்பதைத்தான் தொடர்ச்சியாக பல தேர்தல் முடிவுகளின் மூலம், நாட்டுக்கு உணர்த்தி வருகிறார் ராகுல் காந்தி.
உத்தரபிரதேச தேர்தலை வைத்து இப்படி ஒரு முடிவுக்கு வர முடியுமா என்ற கேள்வி ராகுல் காந்தி ஆதரவாளர்களால் முன் வைக்கப்படலாம். பஞ்சாப், மணிப்பூர், கோவாவில் வென்றது காங்கிரஸ்தானே என்று பதில் கேள்விகள் வரலாம். அவர்களுக்காகத்தான் அடுத்த சில வரிகள்.
எதிர்த்த ராகுல்காந்தி
பஞ்சாப் முதல்வர் வேட்பாளராக கேப்டன் அம்ரித் சிங்கை முன்னிருத்த ராகுல் காந்தியே முட்டுக்கட்டை போட்டார் என்பது பலருக்கும் தெரிந்திருக்குமே. அந்த அமிர்த் சிங் தலைமையில்தான் இப்போது பஞ்சாப்பில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. பாஜக கூட்டணி ஆட்சி தொடர்ந்ததனால் ஏற்பட்ட இயல்பான மக்களின் வெறுப்பும் ஒரு காரணம்.
கண்டுகொள்ளவில்லை
மணிப்பூரில் காங்கிரஸ் கடும் போட்டிக்கிடையே மீண்டும் ஆட்சியை தக்க வைக்கும் சூழல் உருவாக அம்மாநில முதல்வர் ஒக்ராம் இபோபி முக்கிய காரணம். ராகுல் உட்பட காங்கிரசின் மூத்த தலைவர்கள் பலரும் மணிப்பூரை பல நாட்களாக எட்டிப்பார்க்கவில்லை. இறுதிகட்டத்தில் பிரசாரத்திற்கு சென்றபோதும், ராகுல் காந்தியின் பிரசாரத்தால் சர்ச்சை உருவானது நினைவிருக்கலாம்.
கோவா
கோவா கதையும் அதேதான். கோவாவில் காங்கிரஸ் வெற்றிபெறும் என்று காங்கிரசே நினைக்கவில்லை. குறிப்பாக ராகுல்காந்திக்கு அதுபற்றி ஐடியாவே இல்லை. எனவே அம்மாநிலத்தை பெரிதாக கண்டுகொள்ளவும் இல்லை. ஆனால் உ.பியில்தான் ராகுல்காந்தி விழுந்து, விழுந்து பிரசாரம் செய்தார்.
மொத்த திறமையையும் இறக்கினார்
ராகுல்காந்தி, முழுக்க மோடிக்கு எதிராக முஷ்டி உயர்த்தியது உ.பியில்தான். அவர் எங்கு தனது திட்டங்களை செயல்படுத்தினாரோ அங்குதான் காங்கிரஸ் அமோக தோல்வியை தழுவியுள்ளது. இதனால்தான் உ.பி. தேர்தலில் பெற்ற பிரமாண்ட தோல்விக்கு காங்கிரஸ் ராகுல்காந்தியை பலியாக்க வேண்டிய சூழல் வந்துள்ளது.
காங்கிரசின் கவலை
தலைவியின் மகன் என்பதால் தலையில் வைத்து தாங்கும்போக்கு இன்னமும் தொடர்ந்தால், காங்கிரசின் எதிர்காலம் காணாமல்தான் போகும். உரிய தலைமையை முன்னிருத்தி வலுவான எதிர்க்கட்சியாக செயல்படுவதே காங்கிரசின் சமகால அவசர தேவை.