திருச்சானூர் பத்மாவதி தாயார் பிரம்மோற்சவம் கோலாகலமாக தொடங்கியது
திருப்பதி: திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் பிரம்மோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் கோலகலமாக தொடங்கியது. வரும் 27ம் தேதி வரை 9 நாட்கள் நடைபெற உள்ள பிரம்மோற்சவ விழாவை காண ஏராளமான பக்தர்கள் திருச்சானூரில் குவிந்துள்ளனர்.
திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழாவை போன்று, திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் கார்த்திகை பிரம்மோற்சவமும் வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது.
கொடியேற்றம்
திருமலை ஏழுமலையானின் பட்டத்து ராணியான திருச்சானூர் பத்மாவதித் தாயாருக்கு, ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் 9 நாள்கள் வருடாந்திர பிரம்மோற்சவம் விமரிசையாக நடைபெறும்.
அதன்படி, தாயார் சன்னதிக்கு எதிரில் உள்ள கொடிமரத்தில் புதன்கிழமை காலை 9.16 மணி முதல் 9.36 மணிக்குள் தனுர் லக்கனத்தில், தாயாரின் வாகனமான யானையின் கொடி ஏற்றப்பட்டது.
தேவர்களுக்கு அழைப்பு
கொடியேற்றத்தை காண ஏராளமான பக்தர்கள் திரண்டிருந்தனர். இந்தக் கொடியேற்றத்தைக் கண்டவர்கள் அனைத்து தேவர்களின் ஆசீர்வாதத்தைப் பெற்றவர்களாவர் என்பது ஐதீகம். பிரம்மோற்சவத்தைக் காண வரும்படி தேவாதி தேவர்களுக்கு அழைப்பு விடுக்க பலவிதமான வாத்தியக் கருவிகள் வாசிக்கப்பட்டன.
மலர் அலங்காரம்
கார்த்திகை பிரம்மோற்சவத்தை ஒட்டி, கோயில் முழுவதும் பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. பின், பிரம்மோற்சவத்தின் முதல் நாள் வாகன சேவை இரவு 9 மணிக்கு தொடங்கியது.
அதில், பத்மாவதித் தாயார் சின்னசேஷ வாகனத்தில் மாடவீதியில் வலம் வந்தார். பத்மாவதித் தாயாரை, சின்னசேஷ வாகனத்தில் தரிசிப்பவர்களின் சர்பதோஷங்கள் விலகும் என்பதால், இந்த வாகன சேவையில், பக்தர்கள் அதிக அளவில் கலந்து கொண்டு தாயாரை தரிசித்தனர்.
கருடவாகன சேவை
வியாழக்கிழமையான இன்று காலை பெரியசேஷ வாகனத்தில் தாயார் வலம் வந்தார். இரவு அன்னப்பறவை வாகனத்தில், தாயார் மாடவீதியில் வலம் வரவுள்ளார்.
21ஆம்தேதி காலை முத்துப் பல்லக்கு வாகனம், இரவு சிம்ம வாகனம், 22ஆம் தேதி காலை கற்ப விருட்ச வாகனம், இரவு அனுமன் வாகனம், 23ஆம் தேதி காலை பல்லக்கு வாகனம், இரவு யானை வாகனம் ஆகிய சேவைகள் நடைபெற உள்ளன.தொடர்ந்து 24ஆம் தேதி காலை சர்வ பூபாள வாகனம், மாலை தங்கத்தேரோட்டம், இரவு கருட வாகன சேவையும் நடைபெறும்.
பஞ்சமி தீர்த்தம்
பின்னர் 25ஆம் தேதி காலை சூரிய பிரபை, இரவு சந்திர பிரபை, 26ஆம் தேதி காலை தேர்த் திருவிழா, இரவு குதிரை வாகன சேவையும் நடைபெறும்.
நிறைவு நாளான 27ஆம் தேதி காலை கோயில் வளாகத்தில் உள்ள பத்ம குளத்தில் பஞ்சமி தீர்த்தம் நடைபெறும். பின்னர் பிரம்மோற்சவ கொடியிறக்க நிகழ்ச்சி நடைபெறும். மறுநாள் 28ஆம் தேதி தாயாருக்கு புஷ்பயாக நிகழ்ச்சி நடைபெற உள்ளது. பிரம்மோற்சவத்தை முன்னிட்டு தென் மாநிலங்களிலிருந்தும், மகாராஷ்டிரத்திலிருந்தும் சுமார் 500 ஸ்ரீவாரி சேவார்த்திகள் பக்தர்களின் சேவைக்காக ஈடுபடுத்தப்பட்டனர்.
குங்கும அர்ச்சனை
பிரம்மோற்சவத்தை முன்னிட்டு நேற்று பத்மாவதி தாயாருக்கு லட்ச குங்குமார்ச்சனை சிறப்பாக நடைபெற்றது. மேலும் பெயர் வெளியிட விரும்பாத பக்தர் ஒருவர் நேற்று தாயாருக்கு ரூ. 8 லட்சம் மதிப்பில் தங்க சடாரியை காணிக்கையாக வழங்கினார்.
மலர் கண்காட்சி
பிரம்மோற்சவத்தை ஒட்டி, திருச்சானூரில் உள்ள நந்தவனத்தில், தேவஸ்தானம் மலர் கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளது. இதில், பல வண்ண மலர்கள் பலவித வடிவங்களில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. மேலும், பக்தர்களை வரவேற்கும் விதமாக திருப்பதி பேருந்து நிலையம் முதல் திருச்சானூர் வரை அலங்கார வளைவுகள், மின்விளக்கு அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த 9 நாள்களும் திருச்சானூரில், அனைத்து ஆர்ஜித சேவைகளையும் தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.