வெங்கையா நாயுடு கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டம்... திரினாமூல் காங்கிரஸ் புறக்கணிப்பு
டெல்லி: நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் நாளை தொடங்குவதையொட்டி இன்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் வெங்கையா நாயுடு கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தைப் புறக்கணிப்பதாக திரினாமூல் காங்கிரஸ் அறிவித்துள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் செய்தித் தொடர்பாளரும், ராஜ்யசபா எம்.பியுமான டெரிக் ஓ பிரையன் கூறுகையில், அனைத்துக் கட்சி கூட்டத்தில் திரினாமுல் காங்கிரஸ் பங்கேற்காது. எங்களுக்கு முறையான அழைப்பு வரவில்லை.
விடுமுறை தினத்தில் இந்த கூட்டத்தை நடத்துவது ஏன்? அரசியல் பழி வாங்கும் நடவடிக்கையில் இந்த அரசு ஈடுபடுகிறது என்றார் பிரையன்.
ஏற்கனவே மோடி அரசு மீது கடும் காட்டமாக இருக்கிறார் மமதா பானர்ஜி. மேற்கு வங்கத்தில் தீவிரவாத அமை்பபுகளின் அட்டகாசம் தொடர்பான விவகாரத்தில் மோடி அரசுக்கும், மேற்கு வங்க அரசுக்கும் இடையே மோதல் நிலவுகிறது. மேலும் சாரதா சிட் பண்ட் மோசடி விவகாரத்திலும் மத்திய அரசுடன் மோதி வருகிறார் மமதா.
சமீபத்தில் டெல்லியில் நடந்த நேரு மாநாட்டுக்கு வருவதற்காக மமதா கிளம்பிய சமயத்தில் அவர் பயணிக்கவிருந்த விமானம் கடைசி நேரத்தில் ரத்தானதால் மேலும் ஆத்திரமடைந்தார். இதற்கு மோடி அரசின் சதியே காரணம் என்றும் குற்றம் சாட்டியிருந்தார். இந்த நிலையில் இன்றைய அனைத்துக் கட்சிக் கூட்டத்தை திரினமூல் காங்கிரஸ் புறக்கணிக்கிறது.