ஜிஎஸ்டி வரி நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்- மம்தா பானர்ஜி புறக்கணிப்பு
சரக்கு மற்றும் சேவை வரி நாளை நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்படுகிறது மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி அதை புறக்கணிக்கப் போவதாக கூறியுள்ளார்.
கொல்கத்தா: நாடு முழுவதும் ஒரே சீரான வரி விதிப்பை அமல்படுத்தும் விதமாக சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும் ஜிஎஸ்டி வரி வருகிற 30ம் தேதி நள்ளிரவில் அறிமுகப்படுத்தப்படுகிறது. வரலாற்று சிறப்பு மிக்க ஜிஎஸ்டி வரி அறிமுக நிகழ்ச்சியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்பிக்கள் பங்கேற்க மாட்டார்கள் என்று மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
மிக நீண்ட கால இழுபறிக்கு பிறகு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஜிஎஸ்டி மசோதா நிறைவேற்றப்பட்டது. பின்னர் மாநில அரசுகளுடன் பேச்சு வார்த்தை நடத்துவதற்காக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தலைமையிலான ஜிஎஸ்டி கவுன்சில் அமைக்கப்பட்டு பல சுற்று பேச்சு வார்த்தைகள் நடத்தி வரி நிலவரங்கள் இறுதி செய்யப்பட்டன.
இதை தொடர்ந்து வருகிற 30ஆம் தேதி வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் ஜிஎஸ்டி கட்டாயம் அமலாகிறது என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்திருந்தார்.
நாளை வெள்ளிக்கிழமை நள்ளிரவில் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெறும் ஜிஎஸ்டி அறிமுக விழாவில் ஜனாதிபதி பிரணாப், துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி, பிரதமர் மோடி உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள், லோக்சபா தலைவர் சுமித்ரா மகாஜன், மாநில முதல்வர்கள் கலந்து கொள்கின்றனர்.
மேலும் முன்னாள் பிரதமர்கள் மன்மோகன் சிங், தேவகவுடா உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்களும் கலந்து கொள்கின்றனர். நாடாளுமன்றத்தில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் அனைத்து எம்பிக்களும் கலந்து கொள்ள வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மமதா பானர்ஜி எதிர்ப்பு - புறக்கணிப்பு
நாடாளுமன்றத்தில் நாளை நள்ளிரவில் நடக்கும் ஜிஎஸ்டி அறிமுக நிகழ்ச்சியில் திரிணாமுல் காங்கிரஸ் கலந்துக் கொள்ளாது என மம்தா பானர்ஜி கூறி உள்ளார். ஜிஎஸ்டி அறிமுகம் மத்திய அரசின் மற்றொரு மிகப்பெரிய தவறாகும் எனவும் மம்தா பானர்ஜி விமர்சனம் செய்து உள்ளார்.
மம்தா பானர்ஜி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழுவானது ஜூன் 30ஆம் தேதி நாடாளுமன்றத்தில் நடைபெறும் ஜிஎஸ்டி அறிமுக கூட்டத்தில் கலந்துக் கொள்ளக்கூடாது என முடிவு செய்து உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
மம்தா பானர்ஜி பேஸ்புக்கில் வெளியிட்டு உள்ள தகவலில் போராட்டத்தின் ஒரு நகர்வாக கலந்துக் கொள்ளப்போவது கிடையாது. ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தலில் நாங்கள் மிகவும் கவலைக் கொண்டு உள்ளது. உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டு ஒழிப்பு நடவடிகையை அடுத்து மத்திய தேவையற்ற, சீரழிவு தரும் அவசரத்தில் ஜிஎஸ்டியை அறிமுகம் செய்து மிகப்பெரிய தவறிழைக்கிறது என கூறியுள்ளார்.
மத்திய அரசு ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையை செயல்படுத்தும் விதமானது மிகவும் கவலையடைய செய்து உள்ளது. ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையை மிகவும் நேர்த்தியாக அமலுக்கு கொண்டுவர வேண்டும் அதற்கு கூடுதல் நேரம் எடுத்துக் கொள்ளவேண்டும் என்ற எங்களுடைய பரிந்துரையானது செவுட்டு காதுகளில் விழுந்து உள்ளது.
சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் உட்பட மொத்த தொழில்துறையும் இதனால் பெரும் குளறுபடியில் உள்ளது. முறையாக திட்டமிடப்படாத திட்டத்தை செயல்படுத்துவதற்கு முன்னதாக வெறும் 60 மணி நேரங்களே உள்ளது, என்ன நடக்கும் என யாருக்குமே தெரியாது.
மருந்து பொருட்கள் போன்ற அத்யாவசிய பொருட்கள் கிடைக்கப்பெறாத நிலையானது காணப்படுகிறது, தெளிவின்மை மற்றும் மோசமான நிர்வாகம் காரணமாக பல்வேறு பகுதிகளில் அத்யாவசியப் பொருட்களின் விலை உயர்ந்து உள்ளது. நாங்கள் நாட்டின் கூட்டாச்சிக்கு போராடி வருகிறோம், மேற்கு வங்கம் தனிமையாக தன்னுடைய குரலை உயர்த்தி வருகிறது என குறிப்பிட்டு உள்ளார்.
ஆட்சியில் இருக்கும் பாஜக ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறைக்கு 7 ஆண்டுகளுக்கு மேலாக எதிர்ப்பு தெரிவித்தது, ஆனால் ஆட்சிக்கு வந்ததும் குட்டிக்கரணம் போட்டு உள்ளது என சாடியுள்ளார் மம்தா பானர்ஜி.
சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் உட்பட பல்வேறு வர்த்தகர்களுக்கும் போதுமான கால அவகாசம் கொடுக்க வேண்டும். குறைந்தது 6 மாத கால அவகாசம் தேவை, அப்போதுதான் ஜிஎஸ்டியை அமல்படுத்த முடியும். இல்லையெனில் நம்முடைய நாட்டில் பெரிய பொருளாதார நாட்டில் குழப்பங்களே ஏற்படும் அதற்கு அரசே முழு பொறுப்பேற்க வேண்டும் எனவும் மம்தா பானர்ஜி கூறி உள்ளார்.
ஜிஎஸ்டி வரித்திட்டத்துக்கு மாறுவதனால் ஏற்படும் குறுகிய காலச் சவால்களுக்கு தயாராக இருக்க வேண்டிய தேவை இருக்கிறது என்று அருண் ஜெட்லி தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜிஎஸ்டி வரியினால் சிறு மற்றும் குறு தொழில்கள் அழியும் அபாயம் எழுந்துள்ளதாக கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.