மத்திய அரசு உத்தரவுக்கு அவ்வளவு மரியாதை.. தானே காரில் ஏறி சுழல் விளக்கை அகற்றிய எடப்பாடி பழனிச்சாமி
தனது காரில் ஏறி தானே சிவப்பு விளக்கை அகற்றி, அதை ஊழியரின் கைகளில் கொடுத்தார் எடப்பாடி பழனிச்சாமி.
டெல்லி: சிகப்பு சுழல் விளக்கு பயன்படுத்த தடை என்ற முடிவானது மே மாதம் ஒன்றாம் தேதியின் முதல் அமலுக்கு வருகிறது. இதையொட்டி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது காரில் பொருத்தப்ப்டட சுழல் விளக்கே இன்று, தானே அகற்றினார்.
தீயணைப்பு துறை, போலீஸ், ராணுவம் மற்றும் ஆம்புலன்ஸ்கள் அவசரகால சேவையின் போது சிகப்பு சுழல் விளக்கு பயன்படுத்த அனுமதி வழங்கப்படுகிறது.
இது தொடர்பாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்காரி கூறுகையில் "அவசரகால சேவையில் ஈடுபடும் வாகனங்கள் தவிர்த்து பிற வாகனங்களில் சிகப்பு சுழல் விளக்கு பயன்படுத்துவதற்கு தடை விதிக்க மத்திய அமைச்சரவை முடிவெடுத்துள்ளது. மே மாதம் ஒன்றாம் தேதி முதல் இந்த நடைமுறை அமலுக்கு வருகிறது" என்றார்.
விஐபி கலாசாரம்
"மத்திய அரசு பொது மக்களுக்கான அரசாகும், எனவே அரசு விஐபிக்கள் கலாச்சாரத்தை அழிக்கும் விதமாக சிகப்பு சுழல் விளக்கு பயன்படுத்துதலை தடைவிதிக்க முடிவு செய்து உள்ளது," எனவும் கட்காரி தெரிவித்தார்.
விலக்கு
குடியரசு தலைவர், துணை குடியரசு தலைவர், பிரதமர், மக்களவை சபாநாயகர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோருக்கு மட்டுமே சிவப்பு சுழல் விளக்கு பொருத்த அனுமதியளிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
தானே அகற்றிய முதல்வர்
இந்த நிலையில், ஏப்ரல் 20ம்தேதியான இன்றே, தனது காரிலிருந்து சிவப்பு விளக்கை அகற்றினார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. தனது காரில் ஏறி தானே சிவப்பு விளக்கை அகற்றி, அதை ஊழியரின் கைகளில் கொடுத்தார் எடப்பாடி பழனிச்சாமி.
மத்திய அரசு அறிவுறுத்தல்
இதையடுத்து அளித்த பேட்டியில் மத்திய அரசின் அறிவுறுத்தலை ஏற்று தனது காரிலிருந்து சிவப்பு சுழல் விளக்கை அகற்றிவிட்டதாகவும், உயர் அதிகாரிகள் கார்களில் இருந்து சிவப்பு சுழல் விளக்கு அகற்றப்படும் என்றும் அவர் அறிவித்தார். இன்னும் 10 நாட்களுக்கு மேல் கால அவகாசம் உள்ள நிலையிலும், மத்திய அரசின் முடிவை இன்றே நிறைவேற்றியுள்ளார் எட்பாடி பழனிச்சாமி. அதுவும் அவரே சிரமேற்பட்டு செய்து முடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.