மத்திய அமைச்சர்கள் அருண்ஜெட்லி, ராஜ்நாத் சிங், ராதாமோகன் சிங் உடன் தமிழக விவசாயிகள் சந்திப்பு
மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வேளாண்துறை அமைச்சர் ராதாமோகன்சிங் ஆகியோரை தமிழக விவசாயிகள் சந்தித்து பேசினார்.
டெல்லி: தலைநகர் டெல்லியில் 15 நாட்களாக போராடி வரும் விவசாயிகள் இன்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியையும், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கையும் சந்தித்து பேசினார். வேளாண்துறை அமைச்சர் ராதாமோகன் சிங்கை தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு தலைமையில் சென்று தமிழக விவசாயிகள் நேரில் சந்தித்து பேசினர்.
டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் தேசிய தென்னக நதிகள் இணைப்பு, விவசாயிகள் கடன் தள்ளுபடி, வறட்சி நிவாரணம் அறிவித்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தை சேர்ந்த விவசாயிகளின் அரை நிர்வாணமாக15வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தூக்குப் போட்டு போரட்டம், சாலையில் உருண்டு போராட்டம், எலிக்கறி சாப்பிடும் போராட்டம் என பல போராட்டங்களை நடத்தி நூதனமான முறையில் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். இந்த போராட்டத்துக்கு பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் ஆதரவு தெரிவிக்கப்பட்டு வருகிறது.
அமைச்சர் துரைக்கண்ணு
தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு எம்.பி தம்பித்துரை ஆகியோர் இன்று டெல்லியில் விவசாயிகளை நேரில் சந்தித்து பேசினர். அப்போது மத்திய அமைச்சரை சந்திக்க அழைத்து செல்வதாக தெரிவித்தனர்.
அருண் ஜெட்லியுடன் சந்திப்பு
மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியுடன் தமிழக விவசாயிகள் அய்யாக்கண்ணு தலைமையில் நேரில் சந்தித்து பேசினர். திருச்சி சிவா தலைமையில் சென்ற விவசாயிகள், வறட்சி நிவாரண நிதியை தமிழகத்திற்கு கூடுதலாக ஒதுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். கடன்கள் தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என்றும் நிதியமைச்சரை வலியுறுத்தினர். அப்போது அமைச்சர் ஸ்மிருதி இராணியும் உடனிருந்தார்.
ராஜ்நாத் சிங் உடன் சந்திப்பு
இதனைத் தொடர்ந்து உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கையும் விவசாயிகள் நேரில் சந்தித்து பேசினர். தங்களின் கோரிக்கைகள் அடங்கிய மனுவையும் அப்போது விவசாயிகள் அளித்தனர். விவசாய கடன்கள் தள்ளுபடி பற்றி மோடி அறிவித்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்
வேளாண்துறை அமைச்சர்
மத்திய வேளாண்துறை அமைச்சர் ராதாமோகன் சிங்கை விவசாயிகள் சந்தித்து பேசினர். அப்போது விவசாயிகளுடன் தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு தலைமையில் சென்ற தமிழக விவசாயிகள் கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர். விவசாய கடன்கள் தள்ளுபடி, வறட்சி நிவாரண நிதி தொடர்பாகவும் அப்போது அவர்கள் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜனாதிபதியுடன் சந்திப்பு
இதனிடையே இன்று இரவு ஜி.கே. வாசன் தலைமையில் தமிழக விவசாயிகள் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி சந்தித்து பேச உள்ளனர். அப்போது காவிரி நதிநீர் பங்கீடு, கடன் தள்ளுபடி பற்றி கோரிக்கை வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.