டெல்லியில் 15-வது நாளாக தமிழக விவசாயிகள் போராட்டம்.. பெருகும் பிற மாநில விவசாயிகளின் ஆதரவு
டெல்லி 15வது நாளாக தமிழக விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு பிற மாநில விவசாயிகள் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
டெல்லி: டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக உத்தர பிரதேசம், ஹரியானா, பஞ்சாப் மாநில விவசாயிகளும் போராட்டத்தில் கலந்து கொண்டனர். இதனால் தமிழக விவசாயிகளின் போராட்டம் வலு பெற்று தீவிரம் அடைந்துள்ளது.
தமிழகத்தில் நிலவும் கடும் வறட்சி காரணமாக கடந்த சில மாதங்களில் 250க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டும், மாரடைப்பு ஏற்பட்டும் உயிரிழந்துள்ளனர். எனவே, தமிழக விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், உடனடியாக நிவாரண உதவி வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாகண்ணு தலைமையில் கடந்த 15 நாட்களாக பெண்கள் உள்பட 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் பல்வேறு வகையில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
உபி விவசாயிகள் எச்சரிக்கை
தமிழக விவசாயிகளின் தொடர் போராட்டத்தில் உத்தர பிரதேச மாநிலம், ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த விவசாயிகள் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளனர். உ.பி. மாநில பாரத் கிசான் யூனியன் விவசாய அமைப்பினர் கூறுகையில், இந்த போராட்டம் தமிழக விவசாயிகளுக்கானது அல்ல, நாட்டில் உள்ள அனைத்து விவசாயிகளின் போராட்டம். இதற்கு மத்திய அரசு சரியான தீர்வு காணவில்லை என்றால் நாடு தழுவிய விவசாயிகளின் போராட்டமாக மாறும் என்று எச்சரித்தனர்.
பொதுமக்கள் ஆதரவு
தங்களுக்காக தற்காலிகமாக அமைக்கப்பட்ட பந்தலைக் கூட அகற்றிவிட்ட நிலையில் விவசாயிகள் சுட்டெரிக்கும் வெயிலில் சட்டையில்லாமல் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு அங்குள்ள பொதுமக்கள் பெரிய அளவில் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
சமூக வலைத்தளங்கள்
இதே போன்று சமூக வலைத்தளங்களில் விவசாயிகளின் போராட்டம் குறித்து செய்திகள் வெளியிடப்படுவதால், அதனைப் பார்க்கும் தமிழர்கள் ஜந்தர் மந்தர் பகுதிக்கு வந்து விவசாயிகளை சந்தித்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துச் செல்கின்றனர். அவர்கள் கொண்டு வரும் உணவுகளை விவசாயிகளுக்கு வழங்கி போராட்டக் களத்தில் சிறிது நேரம் அமர்ந்து விட்டு செல்கின்றனர்.
மாணவர்கள் ஆதரவு
டெல்லியில் போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து ஜந்தர் மந்தருக்கு பல்வேறு மாணவர் அமைப்புகளைச் சேர்ந்த மாணவர்கள் பதாகைகள் ஏந்தியபடி வந்து செல்கின்றனர். விவசாயிகளிக்கு மாணவர்களின் ஆதரவு பெரும் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரணாப்புடன் சந்திப்பு
இந்நிலையில், இன்று காலை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே. வாசன் போராட்டக்காரர்களை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். மேலும், இன்று மாலை 7 மணியளவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை விவசாயிகள் சந்திக்க ஏற்பாடு செய்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
தம்பிதுரை பேச்சுவார்த்தை
தமிழக விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருவதால், தமிழக விவசாயத்துறை அமைச்சர் துரைக்கண்ணு, நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பித்துரை ஆகியோர் இன்று விவசாயிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் விளைவாய் மத்திய வேளாண்துறை அமைச்சர் ராதா மோகன் சிங்கை இன்று மாலை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.