முடிவு தெரியாம ஊர் திரும்ப மாட்டோம்… 16வது நாள் போராட்டத்தில் கம்பீர விவசாயிகள்
டெல்லி 16வது நாளாக தமிழக விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். ஜனாதிபதி, மத்திய அமைச்சர்கள் யாரை சந்தித்தாலும் அவர்கள் உரிய முடிவை அறிவிக்காத வரை ஊர் திரும்ப மாட்டோம் என்று உறுதியுடன் விவ
டெல்லி: டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகளுக்கு பல்வேறு தரப்பினரின் ஆதரவு பெருகி வரும் நிலையில், ஜனாதிபதி, மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி, ராதா மோகன் சிங் என யாரை சந்தித்தாலும் முறையான முடிவுகள் தெரியாத வரை ஊர் திரும்ப மாட்டோம் என்று கூறி 16வது நாளாக இன்றும் உழவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் நிலவும் கடும் வறட்சி காரணமாக கடந்த சில மாதங்களில் 250க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டும், மாரடைப்பு ஏற்பட்டும் உயிரிழந்துள்ளனர். எனவே, தமிழக விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், உடனடியாக நிவாரண உதவி வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாகண்ணு தலைமையில் கடந்த 16 நாட்களாக பெண்கள் உள்பட 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் பல்வேறு வகையில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
நூதனப் போராட்டங்கள்
கழுத்தில் மண்டை ஓடு மாலை அணிந்து கொண்டும், சவம் போல் சாலையில் படுத்தும், தூக்குக் கயிறு கழுத்தில் மாட்டிக் கொண்டும் பல்வேறு வகைகளில் விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். சுட்டெரிக்கும் வெயிலில் சட்டை கூட அணியாமல் நிழலுக்கு பந்தல் கூட இல்லாமல் அவர்கள் போராட்டத்தை சளைக்காமல் நடத்தி வருகின்றனர்
அரசியல் தலைவர்கள்
டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் உழவர்களை நேற்று தமிழ்மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே வாசன், லோக் சபா துணை சபாநாயகர் தம்பிதுரை, தமிழக அமைச்சர் துரைகண்ணு, திமுக எம்பி திருச்சி சிவா உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் விவசாயிகளை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
விவசாய சங்கங்கள்
தமிழக விவசாயிகளின் தொடர் போராட்டத்திற்கு உ.பி. மாநில பாரத் கிசான் யூனியன் விவசாயம் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது. மற்றும் ஹரியானா, பஞ்சாம் உள்ளிட்ட மாநில விவசாயிகளும் ஆதரவு நல்கியுள்ளனர்.
டெல்லி தமிழர்கள்
தங்களுக்காக தற்காலிகமாக அமைக்கப்பட்ட பந்தலைக் கூட அகற்றிவிட்ட நிலையில், விவசாயிகள் சுட்டெரிக்கும் வெயிலில் துவண்டுவிடாமல் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு அங்குள்ள தமிழர்கள் உணவு சமைத்துக் கொடுத்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
ஜனாதிபதியுடன் சந்திப்பு
இந்நிலையில், நேற்று மாலை விவசாயிகள், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே. வாசனுடன் சென்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்து விவசாயிகள் மனு கொடுத்தனர். அவரிடம் விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை விளக்கிவிட்டு வந்தனர்.
மத்திய அமைச்சர்களுடன் சந்திப்பு
தமிழக விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருவதால், தமிழக விவசாயத்துறை அமைச்சர் துரைக்கண்ணு, நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை ஆகியோர் மத்திய வேளாண் அமைச்சர் ராதா மோகன் சிங்கை விவசாயிகள் சந்திக்க ஏற்பாடு செய்திருந்தனர். அதே போன்று திமுக ராஜ்ய சபா எம்பி திருச்சி சிவா நிதி அமைச்சர் அருண் ஜேட்லியை சந்திக்க ஏற்பாடு செய்தார்.
ஊர் திரும்ப மாட்டோம்
ஜனாதிபதி பிரணாப் மற்றும் அரசின் முக்கிய அமைச்சர்களை சந்தித்து கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ள விவசாயிகள், முடிவு தெரியாமல் ஊர் திரும்ப மாட்டோம் என்று கூறி இன்று 16வது நாளாக போராட்டத்தை தொடர்ந்துள்ளனர். வெல்க கம்பீர விவசாயிகளின் போராட்டம்.