மூட்டை முடிச்சுகளை தலையில் சுமந்து தமிழக விவசாயிகள் டெல்லியில் நூதனப் போராட்டம்
மூட்டை முடிச்சுகளைக் கட்டி தலையில் வைத்துக் கொண்டு தமிழக விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தினர்.
டெல்லி: டெல்லியில் மூட்டை முடிச்சுகளைத் தலையில் சுமந்து பிரதமர் இல்லத்துக்கு ஊர்வலமாகச் சென்று தமிழக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காவிரி மேலாண் வாரியம் அமைத்தல், வங்கிக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் கடந்த மாதம் 16ம் தேதி, டெல்லி ஜந்தர் மந்தரில் தொடங்கப்பட்ட போராட்டம் 33வது நாளாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மூட்டை முடிச்சுடன் போராட்டம்
அந்த அடிப்படையில் இன்று விவசாயிகள் அனைவரும் மூட்டை முடிச்சுகளைக் கட்டி தலையில் வைத்துக் கொண்டு அகதிகளைப் போல், பிரதமர் இல்லம் நோக்கி ஊர்வலமாகச் சென்றனர். அவர்கள் சிறிது தூரம் சென்ற உடன் போலீசார் தடுத்து நிறுத்தினர்.
தொடர் உண்ணாவிரதம்
தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் இருந்ததால் உடல் நலம் பாதிக்கப்பட்ட விவசாயிகள் நாராயணசாமி, பெரியசாமி ஆகியோர் இன்று மருத்துவமனையில் இருந்து தங்களது உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்ந்தனர். இதனால் அவர்களது உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
ஆதரவு
இதுகுறித்து அய்யாக்கண்ணு பேசியதாவது: திமுக, அதிமுக, காங்கிரஸ் மற்றும் பீகார், உபி, மகாராஷ்டிரா மாநிலங்களைச் சேர்ந்த எம்பிக்கள் எங்களைச் சந்தித்து போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆனால் ஆளும் கட்சி எம்பிகள் யாரும் எங்களை வந்து பார்க்கவில்லை.
அகதிகள் போல்
விவசாயிகளான எங்களுக்குப் பேசவும், போராடவும் உரிமை உண்டு. அகதிகள் போல் நாங்கள் டெல்லியில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று அய்யாக்கண்ணு கூறினார்.