பன்றிய திங்க வச்சிட்டியே.. டெல்லியில் பன்றிக் கறி தின்று தமிழக விவசாயிகள் 39வது நாள் போராட்டம்
தமிழக விவசாயிகள் 39வது நாளாக டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று பன்றிக் கறி தின்று தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
டெல்லி: தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 39வது நாளாக இன்று பன்றிக் கறி தின்று டெல்லியில் போராட்டம் நடத்தினர்.
காவிரி மேலாண்மை வாரியம், விவசாய கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தரில் இரண்டாம் கட்டமாக போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெறும் இந்தப் போராட்டத்தில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றுள்ளனர்.
மழையில் நனைந்து போராட்டம்
விவசாயிகள் நேற்று கொட்டும் மழையில் நனைந்தவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சாலையில் அமர்ந்து உணவு உண்டனர். இதனைப் பார்த்தவர்கள் நெகிழ்ச்சி அடைய வைத்தது.
பன்றிக் கறி உண்டு போராட்டம்
அன்றாடம் ஒரு வகை போராட்டம் என்ற வகையில் இன்று விவசாயிகள் பன்றிக் கறியை உண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயிகள் அனைவரும் பன்றிக் கறியை பச்சையாக வாயில் வைத்துத் தின்று தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
எதிர்ப்பு முழக்கம்
பன்றிய திங்க வச்சிட்டியே, திங்க வச்சிட்டியே, பன்றிக் கறிய திங்க வச்சிட்டியே, மோடியே தமிழக விவசாயிகளை பன்றிக்கறி திங்க வச்சிட்டியே என்ற எதிர்ப்பு கோஷங்களை விவசாயிகள் எழுப்பினர். மேலும், கோரிக்கை நிறைவேறும் வரை போராடுவோம் என்றும் விவசாயிகள் உறுதிப்பட தெரிவித்தனர்.
விவசாயிகள் குற்றச்சாட்டு
இந்தப் போராட்டத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய விவசாயிகள், கர்நாடக மாநிலத்தில் இருந்து காவிரி தண்ணீரை மத்திய அரசு தமிழகத்திற்கு பெற்றுத்தர மறுக்கிறது. உச்சநீதிமன்ற உத்தரவான காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் காலம் தாழ்த்துகிறது என்று குற்றஞ்சாட்டினர்.