ஊருக்கே சோறுபோட்ட தமிழக விவசாயிகளுக்கு டெல்லியில் உணவு தருவது யார் தெரியுமா?
சோழ நாடு சோறுடைத்து என்ற பழம்பெருமையெல்லாம் காற்றோடு போன நிலையில், தமிழக விவசாயிகள் தங்களின் உயிரை விவசாயத்தைக் காக்க தலைநகர் டெல்லியில் போராட்டம் நடத்திவருகிறார்கள். அவர்களின் பசியை, டெல்லி குருத்வார
டெல்லி: பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தமிழக விவசாயிகள் இரண்டாம் கட்டமாகப் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களுக்கு டெல்லி குருத்வாரா பிரபந்தக் கமிட்டி உணவு வழங்கி, பசியாற்றி வருகிறது.
விவசாய கடன் தள்ளுபடி, விளைபொருட்களுக்கு லாபகரமான விலை, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு உயிர் ஆதார கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் அதன் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடந்து வருகிறது.
முதல்கட்டமாக 41 நாட்கள் போராட்டம் நடத்திய அவர்கள் கடந்த மாதம் 16ம் தேதி 2-ம் கட்டப் போராட்டத்தை தொடங்கினர். 2-ம் கட்ட போராட்டம் நேற்று 17-வது நாளாக நீடித்தது.
இதையொட்டி நேற்று 4 விவசாயிகள் தங்களது உடலில் அடிமைச்சங்கிலியை அணிந்து கொண்டனர். அவர்களுடன் சேர்ந்து அய்யாக்கண்ணு உள்ளிட்ட பிற விவசாயிகள் ஜந்தர் மந்தர் ரோட்டில் ஊர்வலமாகச் சென்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்தனர்.
உணவு தரும் குருத்வாரா
டெல்லி ஜந்தர் மந்தரில் இரவு பகலாக போராடி வரும் தமிழக விவசாயிகளுக்குத் தினமும் மூன்று வேளையும் உணவு வழங்கி ஆதரவு அளித்து வருகிறது குருத்வாரா பிரபந்தக் கமிட்டி. தமிழக விவசாயிகள் போராட்டம் வெற்றி பெறவும் அவர்கள் ஆதரவை அளித்துவருகிறார்கள்.
விவசாயிகள் உடல் நலனுக்கேற்ற வகையில் உணவு
டெல்லியில் ஜந்தர் மந்தரில் போராடி வரும் தமிழக விவசாயிகளின் உடல்நிலை, வயது ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கான உணவு மட்டும், போராடும் விவசாயிகள் அனுப்பி வைக்கும் பிரதிநிதி மூலம் டிரம்களில் அடைக்கப்பட்டு வழங்கப்படுகிறது.
ஹோட்டல் உணவு நிறுத்தம்
டெல்லியில் கடந்த பிப்ரவரியில் விவசாயிகள் போராட்டம் நடத்தியபோது அவர்களுக்குத் தமிழகத்தின் பிரபலமான மற்றும் டெல்லியில் இரண்டு கிளைகளையும் வைத்துள்ள தனியார் ஹோட்டலில் இருந்து மதிய உணவு இலவசமாக வழங்கப்பட்டது.
போராட்டத்தைப் பாதித்த ஜிஎஸ்டி
ஜிஎஸ்டி அமலானதால் அந்த ஹோட்டலில் இருந்து இப்போது ஆதரவு கிடைப்பதில்லை என்று விவசாயிகள் கூறுகின்றனர். ஜிஎஸ்டி, ஹோட்டல் உணவு விலையில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதால் வேறு வழியின்றி ஹோட்டல் நிர்வாகம் உணவை நிறுத்தியுள்ளது.
உள்ளூர் அரசியல்வாதிகள் மிரட்டல்
குருத்வாராவில் இருந்து உணவு வழங்கப்படுவதைத் தடுக்க உள்ளூர் அரசியல்வாதிகள் முயன்றனர். ஆனாலும் நாங்கள் அஞ்சாமல் தமிழக விவசாயிகளுக்கு உணவு கொடுக்கிறோம் என்கிறார் தன்னார்வலர் பிரகாஷ்.
உணவளிப்பது எங்கள் கடமை
ஆனால், "ஏழைகளுக்கும், வறியவர்களுக்கும் உணவு வழங்குவது எங்கள் கடமை. அதை எவ்வித சக்தியாலும் தடுக்க முடியாது. மிரட்டல் வந்தால் இரு மடங்காக எங்கள் சேவையை அளிப்போம்" என்கிறார் குருத்வாரா பிரபந்தக் கமிட்டியின் தலைவர் மஞ்சீத் சிங் உறுதியாக.