டெல்லி வீதியில் தமிழக விவசாயிகள் எலிக்கறி சாப்பிடவா 39 எம்.பிக்களை தேர்ந்தெடுத்தோம்?
தமிழகத்தில் விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 15 நாள்களாக போராடி வருகின்றனர்.
டெல்லி: வறட்சி நிவாரணம், பயிர் கடன் தள்ளுபடி, நதி நீர் இணைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் கடந்த 15 நாள்களாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களை மத்திய அரசுதான் சட்டை செய்யவில்லை என்றால் மாநிலத்தை சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் என்று கூறி கொள்வோரும் கண்டுகொள்ளவில்லை.
வடகிழக்கு பருவமழை பொய்த்ததால் தமிழகத்தில் கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால் விவசாய பயிர்கள் சேதமடைந்துவிட்டன. இதனால் தமிழக அரசு சார்பில் விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் ரூ.40,000 கோடி மத்திய அரசிடம் கோரப்பட்டது.
எனினும் அந்த தொகையை மத்திய அரசு ஒதுக்காமல் மாறாக ரூ.1,748 கோடி மட்டுமே ஒதுக்கியது. மேலும் காவிரி மேலாண்மை அமைக்க வேண்டும், தென்னிந்திய நதிகளை இணைக்க வேண்டும், வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும், பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்ய செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் தலைநகர் டெல்லியில் கடந்த 15 நாள்களாக போராடி வருகிறார்.
கட்டாந்தரையில் படுத்த விவசாயிகள்
டெல்லி போராட்டத்தை தொடங்கிய சில நாள்கள் விவசாயிகள் கட்டாந்தரையில் படுத்து உறங்கினர். இவர்களை கண்ட டெல்லி தமிழ் இளைஞர்கள் அவர்களுக்கு கூரையை வேய்ந்து கொடுத்தனர். இன்னும் சிலர் அவர்களுக்கு தேவையான உணவுகளையும், மருந்துகளையும் அளித்து வருகின்றனர்.
நூதன போராட்டங்கள்
மண்டை ஓடுகளைக் கொண்டும், சடலமாக சித்தரிக்கப்பட்டும் பல்வேறு போராட்டங்களை அவர்கள் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் டெல்லியில் உள்ள அருண் ஜேட்லி உள்ளிட்ட அமைச்சர்களை சந்தித்தும் அவர்களது கோரிக்கைகள் இன்றளவும் நிறைவேற்றப்படவில்லை.
மக்கள் பிரதிநிதிகள்
சட்டசபை தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் ஆகியவற்றில் ஒவ்வொரு மாநிலத்திலும் தேர்ந்தெடுக்கப்படுவோர், மக்களுக்கு தேவையானவற்றை கேட்டு பெற்று தரத்தான் மக்கள் சார்பில் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கிறோம். ஆனால் விவசாயிகளின் போராட்டங்களுக்கு அறிக்கை விடுப்பதோடு சரி, கோரிக்கை விடுப்பதோடு சரி என்று ஒப்புக்கு சப்பான விஷயங்களில் தமிழக பிரதிநிதிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
அரசு ஆட்டங்கண்டால்...
தங்கள் பதவிக்கும், ஆட்சிக்கும் பங்கம் ஏற்படும் நிலையில் இவர்கள் டெல்லி சென்று ஜனாதிபதியை சந்திப்பதும், பிரதமரை சந்திப்பதும், வாடிக்கையாகி வருகிறது. ஆனால் விவசாயிகளுக்கென்று ஒரு பிரச்சினை வரும்போது அந்த பிரதிநிதிகள் தீவிரமாக குரல் கொடுக்கவில்லை.
ஜெ. இருந்திருந்தால்...
ஜெயலலிதா இருந்திருந்தால் தமிழர்களை வஞ்சிக்கும் செயலை அனுமதிப்பதிருப்பாரா? அப்படி ஒரு பெரும் தலைமை இல்லாததால் இன்று மக்கள் எத்தனை எத்தனை போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். குடிநீர் பிரச்சினை, விவசாய பிரச்சினை, காவிரி பிரச்சினை என பட்டியல் நீண்டு கொண்டே போகும்.
மத்திய அரசுக்கு ஒத்து...
சிறை நடவடிக்கை உள்ளிட்ட பிரச்சினைகளிலிருந்து காக்க மத்திய அரசை தமிழக அரசு அனுசரித்து கொண்டு செல்கிறது என்றே சொல்லலாம். எனவே இதுபோன்ற கையாலாகாத பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதைக் காட்டிலும் நன்கு படித்த இளைஞர்கள் தேர்தலில் போட்டியிட வேண்டும். அவர்களுக்கு மக்களும் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும். தமிழகத்திற்கு 233 எம்எல்ஏக்கள், 39 எம்.பி.க்கள் இருந்தும் என்ன பயன்?