ஆடி முடிஞ்சா ஆவணி மாதிரி ஜனாதிபதி தேர்தல் முடிந்தவுடன் தமிழக பொதுத் தேர்தல்!
நாட்டின் ஜனாதிபதி தேர்தல் முடிந்த உடன் தமிழகத்தில் சட்டசபை பொதுத் தேர்தல் நடைபெறக் கூடும் என்றே தெரிகிறது.
டெல்லி: நாட்டின் ஜனாதிபதி தேர்தல் முடிந்த கையுடன் தமிழகத்தில் பொதுத்தேர்தலை நடத்துவதற்கான அனைத்து காய்நகர்த்தல்களும் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அதிமுகவை கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ள போராடியது பாஜக. இதற்காக ஓபிஎஸ்ஸை முதல்வராக்கினாலும் சசிகலா இடையூறாக இருந்தார்.
தடுமாறும் பாஜக
சசிகலா சிறைக்குப் போன நிலையில் முதல்வரானார் எடப்பாடி பழனிச்சாமி. எடப்பாடியை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்தாலும் அதிமுகவை கபளீகரம் செய்ய முடியவில்லை பாஜகவால்.
அடுத்தடுத்த நாடகங்கள்
இப்போது ஓபிஎஸ், எடப்பாடி ஆதரவுடன் தினகரனை கட்சியில் வெளியேற்றுவதில் பாஜக மும்முரமாக இருந்து வருகிறது. இதற்காகத்தான் ஆர்கே நகர் தேர்தல் ரத்து, அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு என்கிற ஓரங்க நாடகங்கள்.
தினகரனுக்கு எதிராக
இதன் உச்சகட்டமாக தினகரனை ஓரம் கட்டுவது என்ற அடுத்த நாடகத்துக்கான ஒத்திகைகள் நடந்து வருகின்றன. சசிகலா, தினகரன் இல்லாத ஒருங்கிணைந்த அதிமுகவை வலிமையாக்குவது, இரட்டையை இலையை மீட்டுக் கொடுப்பது பின்னர் கூட்டணி அமைத்து கணிசமான வாக்குகளை அள்ளுவது என்பதுதான் பாஜகவின் அஜெண்டா.
அடுத்தது திமுக?
இப்படிச் செய்தால் தமிழகத்திலும் காலூன்றி சில இடங்களில் வெல்ல முடியும் என்பதே பாஜகவின் திடமான நம்பிக்கை. அதிமுகவை கபளீகரம் செய்துவிட்டால் தங்களுக்கு இருக்கும் ஒரே முட்டுக்கட்டை திமுக. மத்தியில் ஆட்சியில் இருக்கும்போதே அதற்கும் ஏதேனும் வழிவகை வகுத்துவிட வேண்டும் என்பதுதான் பாஜகவின் அடுத்த ப்ளான்.