பாஜகவின் வாக்குறுதிகளை தமிழகம், பீகார் ஏற்காதது ஏன் தெரியுமா? உத்தவ் தாக்கரே விளக்கம்
மும்பை: பாரதிய ஜனதாவின் பிரமாண்ட பொதுக்கூட்ட பிரசாரங்களையோ, வாக்குறுதிகளையோ தமிழகம் மற்றும் பீகார் மக்கள் ஏற்காமல் நிராகரித்துவிட்டனர்; இதற்கு காரணம் அவர்கள் தங்களுக்கான தலைவர்களை முடிவு செய்து வைத்திருந்தார்கள் என்று சிவசேனாவின் தலைவர் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.
சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே அக்கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:
சிவசேனா அதன் 50-வது ஆண்டு நிறைவு விழாவை கடந்த மாதம் கொண்டாடியது. கட்சி தொடங்கி பாதி காலம், அதாவது 25 ஆண்டு காலம் பாரதிய ஜனதா உடன் கூட்டணியில் இருந்தோம். 25 ஆண்டுகள் என்பது மிகவும் நீண்ட காலம். ஒருவரது கையை பிடித்து மற்றொருவர் வளர்ந்தோம்.
வீணாகிப் போனது.. இந்துத்துவா இல்லை
மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலுக்கு முன்பு கூட்டணி முறிந்தது உள்ளிட்ட விஷயங்களைப் பார்க்கும் போது 25 ஆண்டுகள் பாரதிய ஜனதாவுடன் கூட்டணி அமைத்து வீணடித்து விட்டோமோ என்று இப்போது என்னை நினைக்க வைக்கிறது. அந்த நாட்களில், கூட்டணியின் அடிப்படையாக இந்துத்வா இருந்தது. ஆனால், இப்போது இந்த கூட்டணியின் அடிப்படை என்ன என்பதை கண்டறிய நாங்கள் முயற்சிக்கிறோம். நானும், என்னுடைய கட்சியும் அலட்சியப்படுத்தப்படுவதாக உணரும் போது நிச்சயம் ஆட்சியில் இருக்க மாட்டோம். அதற்காக அரசை நான் மிரட்டுவதாக நினைக்க வேண்டாம். நான் மனதில் பட்டதை சொல்கிறேனே தவிர, ஒருபோதும் முதுகில் குத்தமாட்டேன்.
பட்னாவிசுக்கு வாழ்த்து
முதல்வர் தேவேந்திர பட்னாவிசுடன் நான் தொடர்பில் இருக்கிறேன். தேவேந்திர பட்னாவிசின் கடமையையும், தளர்வில்லாத முயற்சிகளையும் உன்னிப்பாக கவனிக்கிறேன். வரும்காலங்களில் அவர் சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
ஜெ, லாலுவுக்கு மக்கள் ஆதரவு
தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து லாலு பிரசாத் யாதவ் விலகி இருக்கிறார். இருந்தாலும், பீகார் சட்டசபை தேர்தலில் அவரது கட்சி மிகப்பெரிய கட்சியாக வெளிப்பட்டது. இதே நிலைமை தான் தமிழ்நாட்டில் ஜெயலலிதாவுக்கும் ஏற்பட்டது. இவர்கள் இருவரும் ஊழல் குற்றச்சாட்டில் சிறைக்கு சென்று, பின்னர் வெளிவந்தனர். இருந்தாலும், அந்த மாநில மக்கள் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில், அவர்களை தேர்ந்தெடுத்தனர்.
பாஜகவை நிராகரிக்கிறார்கள்...
பீகார், தமிழ்நாடு, மேற்கு வங்காளம் மற்றும் கேரள மாநில மக்கள் பாஜகவை நிராகரித்து விட்டு, அவர்களை தேர்வு செய்தது ஏன்?. அந்த மாநில மக்கள் உயர்ந்த வாக்குறுதிகளுக்கும், பிரமாண்ட பொதுக்கூட்ட பேச்சுகளுக்கும் செவிசாய்க்கவில்லை. லாலு பிரசாத் யாதவ், ஜெயலலிதா போன்றோர் தான் தங்களது தலைவர்கள் என்று அந்த மாநில மக்கள் உறுதியான முடிவு எடுத்திருக்கின்றனர்.
இவ்வாறு உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.