பாஜகவின் துணை ஜனாதிபதி வேட்பாளர்: தமிழக ஆர்எஸ்எஸ் பிரமுகர் காந்தி பெயரும் பரிசீலனை!
துணை ஜனாதிபதி தேர்தலில் பாஜகவின் வேட்பாளர்கள் பரிசீலனை பட்டியலில் தமிழக ஆர்எஸ்எஸ் பிரமுகர் காந்தி பெயரும் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
டெல்லி: துணை ஜனாதிபதி தேர்தலில் பாஜகவின் வேட்பாளராக தமிழக ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் காந்தியை உள்ளிட்ட 5 பேரின் பெயர்களை அக்கட்சி மேலிடம் பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஜனாதிபதி தேர்தலில் வட இந்தியாவைச் சேர்ந்த ராம்நாத் கோவிந்தை பாஜக வேட்பாளராக நிறுத்தியுள்ளது. இதனால் துணை ஜனாதிபதி தேர்தலில் தென்னிந்தியாவைச் சேர்ந்த ஒருவரை வேட்பாளராக நிறுத்துவது குறித்து பாஜக ஆலோசித்து வருகிறது.
மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு, தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசகர் ராவ், ஆந்திரா தெலுங்கானா ஆளுநர் நரசிம்மன் ஆகியோரது பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. தற்போது தமிழகத்தைச் சேர்ந்த ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் காந்தியின் பெயரும் பரிசீலனையில் இருப்பதாக கூறப்படுகிறது.
அதேபோல் நஜ்மா ஹெப்துல்லா பெயரும் பரிசீலிக்கப்பட்டு வருவதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன. கேரளா ஆளுநர் சதாசிவமும் துணை ஜனாதிபதி பதவிக்கு முயற்சிப்பதாக கூறப்படுகிறது.