இன்று சசிகலா பிறந்தநாள்... மன்னார்குடி கோவிலில் சிறப்பு பூஜைக்கு ஏற்பாடு
சசிகலா இன்று தனது பிறந்தநாளை சிறையில் கொண்டாடுகிறார். இதையொட்டி தமிழகம், கர்நாடகா ஆலயங்களில் பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பெங்களுரு: இன்று சசிகலா தனது பிறந்தநாளை சிறையில் இளவரசியோடு கொண்டாடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
சசிகலாவின் பிறந்தநாளுக்கு முதல் ஆளாக வாழ்த்து சொல்லி பரிசு கொடுக்கும் அவரது உயிர் தோழி ஜெயலலிதா இந்த ஆண்டு இல்லை என்பது மிகவும் சோகமான விசயம். அதோடு அதிமுக பொதுச்செயலாளரான பின்னர் வரும் முதல் பிறந்தநாளை சிறையில் கொண்டாடுகிறார் சசிகலா.
ஜெயலலிதா இருக்கும் போதே சசிகலாவின் பிறந்தநாளுக்கு வாழ்த்தி பிளக்ஸ் பேனர் வைப்பார் விருதுநகர் மேலத்தெருவை சேர்ந்தவர் கணேசன்.
மாணவர் அணி நகரச்செயலாளராக இருந்த இவர், கடந்த அதிமுக ஆட்சியின் போது சசிகலா பேரவை என்று ஒரு அமைப்பை புதிதாக தொடங்கி, தன்னை சசிகலா அனுதாபியாக காட்டிக்கொண்டார். ஒவ்வொரு ஆண்டும், சசிகலா பிறந்தநாளின்போது விருதுநகர் பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் சசிகலாவுக்கு மறக்காமல் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து, பிளக்ஸ் போர்டு வைப்பார்.
சசிகலாவை வீட்டை விட்டு ஜெயலலிதா வெளியேற்றியபோது கடந்த சில ஆண்டுகளாக கணேசன், சசிகலாவுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து பிளக்ஸ் போர்டு வைக்கவில்லை.
பிளெக்ஸ் பேனர்
கடந்த 2015ஆம் ஆண்டு சொத்துக்குவிப்பு வழக்கிற்காக பெங்களூரு சிறையில் ஜெயலலிதா, இளவரசி, சசிகலா இருந்த போது மீண்டும் பிளக்ஸ் பேனர் வைத்தார். இதனையடுத்து கட்சியில் இருந்து ஜெயலலிதாவினால் நீக்கப்பட்டார். இந்த ஆண்டு சசிகலா பொதுச்செயலாளராக இருப்பதால் பிரம்மாண்டமாக அவர் பிளக்ஸ் வைக்கலாம் என்று எதிர்பார்க்கலாம்.
டிடிவி தினகரன்
சசிகலாவின் பிறந்தநாளான இன்று அவரது உறவு சொன்னால் இளவரசி மட்டுமே உடன் இருக்கிறார். டிடிவி தினகரன் பெங்களூருவிற்கு சென்று நேரடியாக வாழ்த்து கூற உள்ளார்.
கோவில்களில் பூஜை
சசிகலாவின் பிறந்நாளை முன்னிட்டு கர்நாடகாவில் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜைக்கு ஏற்பாடு செய்துள்ளனராம். இதேபோல மன்னார்குடியில் உள்ள கோவில்களிலும் சிறப்பு பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாம்.
அரசியல் சூழ்நிலை
தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஜெயலலிதா மரணத்திற்கு நீதி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. அதேபோல போயஸ் தோட்ட வீட்டையும் அரசு நினைவில்லமாக மாற்றப்படும் என்று அறிவித்துள்ளார் முதல்வர். இந்த அறிவிப்புகள் சசிகலாவிற்கு அதிர்ச்சியளிக்கக்கூடியவையே.
இரண்டாவது முறை
பிப்ரவரி 15ஆம் தேதியில் இருந்து கடந்த 6 மாத காலமாக சிறைக்குள் இருக்கிறார் சசிகலா. கடந்த 2015ஆம் ஆண்டும் சிறைக்குள் பிறந்தநாளை கழித்த சசிகலா, இந்த ஆண்டும் சிறைக்குள்ளேயே சோகத்தோடு பிறந்தநாளை கொண்டாடப்போகிறார்.