கிராமப்புற அரசு ஊழியர்கள் வீட்டில் “டாய்லட்” கட்டாயம் கட்ட வேண்டும்: சட்டீஸ்கர் அரசு உத்தரவு
ராய்ப்பூர்: கிராமப்புறங்களில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் தங்கள் வீடுகளில் கட்டாயம் கழிப்பறைகளைக் கட்டியிருக்க வேண்டும் என சட்டீஸ்கர் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து அம்மாநில அரசின் மக்கள் தொடர்பு அதிகாரி, "கிராமப் புறங்களில் பணியாற்றும் அரசு அதிகாரிகள், ஊழியர்கள் உள்ளிட்டோர் தங்கள் வீடுகளில் கழிப்பறைகளைக் கட்டி பயன்படுத்த வேண்டும் என சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
"தூய்மை இந்தியா" திட்டத்தின் ஒருபகுதியாக இதனை செயல்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏனெனில் கிராமங்களில் உள்ள சாதாரண மக்களுக்கிடையே வாழும் அரசு ஊழியர்கள்தான் கழிப்பறைகளின் முக்கியத்துவத்தை அவர்களுக்கு எடுத்துரைக்க முடியும்.
இதுவரை வீடுகளில் கழிப்பறை இல்லாத அரசு ஊழியர்கள் அடுத்த 3 மாதங்களுக்குள் அவற்றைக் கட்டி முடிக்க வேண்டும். அரசு அனுப்பியுள்ள சுற்றறிக்கையின்படி, தங்கள் வீடுகளில் கழிப்பறைகள் உள்ளன என்ற உறுதிமொழி ஆவணத்தை ஊழியர்கள் அளிக்க வேண்டும்.
இந்தத் திட்டத்தின்படி, ஆசிரியர்கள், காவலர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், சுகாதாரத் துறைப் பணியாளர்கள், ஊராட்சி மன்றச் செயலர் உள்ளிட்டோரின் வீடுகளில் கட்டாயம் கழிப்பறை இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.