சகிப்புத்தன்மையால்தான் இந்திய நாகரிகம் நிலைத்து நிற்கிறது... ஜனாதிபதி பிரணாப் 'வார்னிங்'
டெல்லி: தாத்ரியில் மாட்டிறைச்சி சாப்பிட்டார் என்ற வதந்தியால் இஸ்லாமிய பெரியவர் இக்லால் படுகொலை செய்யப்பட்டுள்ள நிலையில் சகிப்புதன்மை என்ற பண்பால்தான் இந்திய நாகரிகம் நிலைத்து நிற்கிறது என்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கருத்து தெரிவித்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. மேலும் ஜனாதிபதியின் இந்த கருத்தை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
டெல்லி ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பேசியதாவது:
நமது நாகரிகமானது வேற்றுமையில் ஒற்றுமை, சகிப்புத் தன்மை, பன்முகத்தன்மை ஆகியவற்றைக் கொண்டது. இவை பாழாவதற்கு நாம் அனுமதிக்கக் கூடாது.
இத்தகைய முக்கியத் தன்மைகள்தான் பல நூற்றாண்டுகளாக நம்மை ஒற்றுமையாக இருக்க வைத்துள்ளன. உலகின் பழைமையான பல்வேறு நாகரிகங்கள் அழிந்துவிட்டன.
ஆனால் தொடர்ச்சியான பல ஆக்கிரமிப்புகள் நிகழ்ந்தும், நீண்டகாலமாக வெளிநாட்டினரின் ஆட்சியின்கீழ் இருந்தும் இந்திய நாகரிகத்துக்கு எதுவும் ஆகவில்லை. இதற்குக் காரணம், நமது நாகரிகத்தின் முக்கிய பண்புகள்தான்.
இதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். அந்த முக்கிய பண்புகளை நமது நினைவில் நிறுத்தினோம் என்றால், எந்த சக்தியாலும் நமது ஜனநாயகத்துக்கு பாதிப்பு ஏற்படுத்த முடியாது.
ஜனாதிபதி பதவி என்பது அரசியலமைப்பு சட்டம் ரீதியிலானது. அந்தப் பதவியை வகிக்கும்போது எந்த பணிகளையும் செய்ய முடியாது என்று எனது நண்பர் கிண்டல் செய்வார்.
ஆனால், நமது நாட்டுக்கு எனது வழியில் நான் பங்களிப்பு செய்து வருகிறேன். ஜனாதிபதி மாளிகைக்கு வந்து 3 ஆண்டுகள் ஆகிவிட்டநிலையில், மேலும் பல பணிகளை செய்திருக்கலாம் என்று உணர்கிறேன்.
மத்தியில் இனிமேல் கூட்டணி ஆட்சிதான் என்றும், இனி எந்த அரசியல் கட்சியும் தனித்து ஆட்சியமைக்க முடியாது என்றும் எண்ணியிருக்கலாம். இந்திய வாக்காளர்கள் தங்களுக்கு இடையேயான வேற்றுமை, நீண்டகாலத்துக்கு தனித்து எந்த கட்சியும் ஆட்சியில் இல்லாத நிலை ஆகியவற்றுக்கு இடையிலும் தங்களது அதிகாரத்தை பயன்படுத்தி, மேற்கண்ட பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டனர்.
நமது இந்திய ஜனநாயகத்தின் அற்புதமே, அதன் தனித்துவம்தான். அதை நாம் கொண்டாட வேண்டும்.
இவ்வாறு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உரையாற்றினார்.
உத்தரபிரதேச மாநிலம் தாத்ரி அருகேயுள்ள பிசோடா கிராமத்தில் மாட்டிறைச்சி சாப்பிட்டதாக கூறப்பட்ட இக்லாக் என்ற இஸ்லாமிய முதியவர் படுகொலை செய்யப்பட்டுள்ள நிலையில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் இந்த கருத்து மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
மோடி கோரிக்கை
மேலும் ஜனாதிபதியின் சகிப்புத்தன்மை தொடர்பான கோரிக்கையை நாட்டு மக்கள் அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். பீகார் தேர்தல் பிரசாரத்தில் பேசிய பிரதமர் மோடி, சகிப்புத் தன்மையை பின்பற்ற வேண்டும் என்ற ஜனாதிபதியின் கோரிக்கையை அனைவரும் கடைபிடிக்கப்பட வேண்டும்.
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நமக்கு பாதையை காட்டி உள்ளார். ஒருவருக்கு ஒருவர் மோத வேண்டுமா அல்லது ஏழ்மைக்கு எதிராக இருவரும் இணைந்து போராட வேண்டுமா என்பதை இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்கள் முடிவு செய்யவேண்டும் என்றார்.