சன் டி.வி. பாதுகாப்பு சான்றிதழ் விவகாரம்-ஒளிபரப்பு அமைச்சகத்தை ஓரம்கட்டும் உள்துறை!
டெல்லி: சன் டிவி குழுமத்தின் 33 சேனல்களுக்கு பாதுகாப்பு அனுமதி சான்றிதழ் நிராகரிக்கப்பட்டது தொடர்பாக ஒளிபரப்புத் துறை அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்த ஆலோசனைக் கூட்டத்தை உள்துறை அமைச்சக உயர் அதிகாரிகள் புறக்கணித்துவிட்டனர். இது சன் டி.வி. குழுமத்துக்கு பின்னடைவாகவே கருதப்படுகிறது.
தென்னிந்தியாவின் டிவி சேனல் தொழிலில் முன்னணி நிறுவனமாக இருந்து வருகிறது சன் குழுமம். இக்குழுமமானது தமது 33 சேனல்களின் ஒளிபரப்பு உரிமத்தை 10 ஆண்டுகாலத்துக்கு புதுப்பிக்க மத்திய அரசிடம் விண்ணப்பித்திருந்தது.
ஆனால் சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறன், அவரது சகோதரர் தயாநிதி மாறன் ஆகியோர் மீது ஏர்செல் மேக்சிஸ் வழக்கு, சட்டவிரோத தொலைபேசி இணைப்பக்க வழக்குகள் நிலுவையில் இருப்பதால் ஒளிபரப்பு உரிமங்களுக்கு தேவையான பாதுகாப்பு அனுமதி சான்றிதழை வழங்க உள்துறை அமைச்சகம் மறுத்துவிட்டது.
இதற்கு முன்னர் சன் குழுமத்தின் 40 எப்.எம். ரேடியோக்களுக்கான அனுமதிக்கும் பாதுகாப்பு அனுமதி சான்றிதழை உள்துறை அமைச்சகம் வழங்கவில்லை. ஆனால் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிட்டு இதற்கு இடைக்கால தடை பெற்றது சன் குழுமம்.
தற்போது அத்தகைய முயற்சியை பெறுவதற்கு முன்னர் உள்துறை அமைச்சகத்துக்கு சன் குழும தலைவர் கலாநிதி மாறன் ஒரு கடிதம் அனுப்பியிருந்தார். அதில் வழக்குகள் நிலுவையில் உள்ள ஊடக நிறுவனங்களை சுட்டிக் காட்டி எங்களுக்கு மட்டும் ஏன் குறி வைத்து அனுமதி மறுக்கப்படுகிறது என கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக ஒளிபரப்புத் துறை அமைச்சக அதிகாரிகள் சட்ட அமைச்சக அதிகாரிகளுடன் பல முறை பேச்சுவார்த்தை நடத்தி இருந்தனர். இந்த ஆலோசனைக் கூட்டங்களுக்கு உள்துறை அமைச்சக அதிகாரிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் உள்துறை அமைச்சக அதிகாரிகளோ இக்கூட்டத்தில் பங்கேற்காமல் நிராகரித்தே வந்தனர்.
இதனால் ஒளிபரப்பு துறை அமைச்சகம்- உள்துறை அமைச்சகம் இடையேயான மோதலும் அதிகரித்தது. தற்போது இந்த விவகாரம் அட்டர்னி ஜெனரல் முகுல் ரத்தோகியிடம் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் உள்துறை, ஒளிபரப்புத் துறை அமைச்சகத்தின் உயர் அதிகாரிகளை சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறன் இந்த வாரம் டெல்லியில் நேரில் சந்தித்து முறையிடக் கூடும் எனவும் கூறப்படுகிறது.