போக்குவரத்து போலீசார் லஞ்சம் வாங்குவதை கண்காணிக்க உடலில் காமிரா.. தெலுங்கானாவில் அறிமுகமாகிறது..
ஐதராபாத்: போக்குவரத்து போலீசார் லஞ்சம் வாங்குவதை கண்காணிப்பதற்காக அவர்கள் உடலில் கண்காணிப்பு காமிராவை தொங்கவிடும் நடைமுறை தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
ஐதராபாத்தில் போக்குவரத்து போலீசார் வாகன ஓட்டிகளிடமிருந்து லஞ்சம் வாங்குவது தொடர்பாக பல்வேறு புகார்கள் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றன.
இதையடுத்து லஞ்சம் வாங்கும் போலீசாரை கண்டறிவதற்காக அவர்கள் உடலில் கண்காணிப்பு காமிராவை தொங்கவிடும் நடைமுறையை ஐதரபாத் காவல்துறை அறிமுகப்படுத்த உள்ளது.
போக்குவரத்து போலீசாரின் கழுத்தில் தொங்கவிடப்படும் இந்த காமிராவில் பதிவாகும் காட்சிகள் காவல் கட்டுப்பாட்டு அறையில் பதிவாகும் வகையில் ஜி.பி.ஆர்.எஸ். வசதி செய்யப்பட்டுள்ளது. குற்றச் செயல்களை கண்காணிக்கவும் இந்த காமிராக்கள் உதவும் என போலீஸ் அதிகாரிகள் கூறினார்.
லஞ்சம் வாங்கும் போலீசாருக்கு இந்த காமிராக்கள் ஒரு கடிவாளமாக அமையும் என வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
இதே போன்று தமிழக காவல் துறையிலும் அறிமுகப்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுவதில் ஆச்சர்யமில்லை.