குருவுக்கு அஞ்சலி செலுத்துவோம்.. நமக்குள் வாழட்டும் கலாம்!!!
- அனந்தகிருஷ்ணன்
பெங்களூரு: குரு பூர்ணிமா. இது இந்தியர்களுக்கு சிறப்பான நாள். தங்களது ஆசிரியர்களை, போதனை செய்தவர்களை, கற்றுக் கொடுத்தவர்களை நினைவு கூறும் நன்னாள். இந்த நேரத்தில் எனது குருவும், கோடானு கோடி இந்தியர்களுக்கு நல்லாசிரியருமாக விளங்கிய டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமுக்கு அஞ்சலி செலுத்த நல்ல நாள் இது.
ஒரு சிஷ்யனாக எனது குருவுக்கு அஞ்சலி செலுத்த சரியான தருணமும் இதுவேயாகும்.
மீடியாவில் உள்ள எனது நண்பர்கள் பலருக்கும், டாக்டர் கலாமுடன் நான் நெருக்கமானவன் என்பது தெரியும். ஜூலை 27ம் தேதி இரவு நான் பேருந்தில் கேரளாவுக்குச் சென்று கொண்டிருந்தேன். அப்போது டாக்டர் கலாம் நலமாக இருக்கிறாரா என்று கேட்டு எனக்கு தொடர்ச்சியாக போன் அழைப்புகள்.
தொடர் அழைப்புகள்...
அவருடைய உடல் நலம் குறித்து அப்போது பல வதந்திகள் உலா வந்து கொண்டிருந்தன. நானும், அவர் நலமாக இருப்பதாக சொல்லிக் கொண்டே இருந்தேன். ஆனால் தொலைபேசி அழைப்புகள் அதிகரிக்க அதிகரிக்க எனக்குள் கவலை படர்ந்தது.
கலாம் மறைந்தார்...
இரவு 7.30 மணி இருக்கும். பஸ்ஸுக்குள் சிக்னல் கிடைக்கவில்லை. மொபைலுடன் போராடிக் கொண்டிருந்தேன். அப்போது, கலாம் அவர்களுக்கு மிகவும் நெருக்கமான ஒருவரிடமிருந்து அழைப்பு வந்தது. குரு கலாம் நம்மை விட்டுப் பிரிந்து விட்டார் என்பதே வந்த தகவல்.
துக்கம்...
உங்களைப் போலவே நானும் எல்லாவற்றையும் இழந்தது போல உணர்ந்தேன். அனாதையாக உணர்ந்தேன். சோகத்துக்குள் மூழ்கிப் போனேன். துக்கத்தில் ஆழ்ந்து போனேன். எனது மிகப் பெரிய சொத்தாக இருந்தவர் கலாம். அவர் இறைவனடி சேர்ந்து விட்டார் என்பதை என்னால் ஏற்க முடியவில்லை. எனது தாயார் மீண்டும் இறந்தது போல உணர்ந்தேன்.
கலவையான உணர்ச்சிகள்...
கலாம் மறைவுக்குப் பின்னர் சில நாட்கள் கடந்த நிலையிலும் அவருடைய நினைவுகளை பிடித்துக் கொண்டு இருந்து வருகிறேன். அவருடனான எனது சந்திப்புகள், எனது உரையாடல்கள், அவரிடமிருந்து நான் கற்றது, அவரை தொடர்பு கொள்ள முடியாமல் அல்லது சந்திக்க முடியாமல் போனபோது நான் அடைந்த ஏமாற்றங்கள், நீ நல்லா எழுதறப்பா என்று அடிக்கடி அவர் கூறியபோது நான் அடைந்த பரவசம், மகிழ்ச்சி ஆகியவை வந்து வந்து போயின.
முதல் சந்திப்பு...
குரு பூர்ணிமா தினத்தையொட்டி அவருக்கான அஞ்சலியை எழுத உட்கார்ந்தபோது, கரு கலாமை முதல் முதலாக நான் சந்தித்ததை நினைவு கூர்ந்தேன். அப்போது அவர் பெங்களூரில் இருந்தார். பேராசிரியர் சதீஷ் தவான் மறைவைத் தொடர்ந்து பெங்களூர் வந்திருந்தார். இஸ்ரோவின் தலைவராக 1972 முதல் 1984 வரை இருந்தவர் பேராசிரியர் சதீஷ் தவான்.
கலாமின் குரு...
"நான் எனது குருவைப் பற்றி மட்டுமே பேசப் போகிறேன். அவரைப் பற்றி மட்டுமே. வேறு எதையும் கேட்காதீர்கள்" இதுதான் 2002ம் ஆண்டு ஜனவரி 5ம் தேதி எங்களுக்குள் நடந்த முதல் உரையாடல். அந்த பேட்டிக்கு ஏற்பாடு செய்தவர் தேஜாஸ் திட்டத்தின் அப்போதைய தலைவராக இருந்த டாக்டர் கோட்டா ஹரிநாராயணா.
பேட்டி தராமல் நழுவினார்...
இந்த சந்திப்புக்கு முன்பு, அடிக்கடி கலாம் அவர்களை அவருடைய டெல்லி லேன்ட்லைன் எண்ணில் தொடர்பு கொள்ள முயற்சித்து வந்தேன். நூற்றுக்கும் மேற்பட்ட முறை முயன்றும், ஒரு சில சமயங்களில் மட்டுமே எனக்கு லைன் கிடைத்தது. நான்தான் என்று தெரிந்ததும் அவர் நைசாக காலை கட் செய்து விடுவார்.
நிறைய மிஸ் செய்கிறேன்...
கலாம் அவர்கள் எங்களது முதல் சந்திப்பின்போது என்னிடம் பேசுகையில், " நான் எனது குரு பேராசிரியர் சதீஷ் தவானை இழந்திருக்கிறேன். 1959ம் ஆண்டு ஹோவர்கிராப்ட்டுக்கான புரபல்லரை எப்படி வடிவமைப்பது என்பதை எனக்கு அவர்தான் கற்றுக் கொடுத்தார். பிறர் குறித்து அதிகம் கவலைப்படுவார் அவர். அது எனக்கு பிடித்திருந்தது. வடிவமைப்பு மற்றும் வளர்ச்சியை சாதாரண மக்களிடம் கொண்டு செல்லுங்கள் என்று அவர் எங்களுக்குக் கற்றுக் கொடுத்தார். அவரை நான் நிறைய மிஸ் செய்கிறேன் என்றார் கலாம்.
விரும்பிப் படித்தார்...
அந்த பேட்டி அடுத்த நாள் டைம்ஸ் ஆப் இந்தியாவில் இந்த தலைப்புடன் வந்தது... "Kalam the student misses Dhawan the guru." ஒரு வாரத்திற்குப் பிறகு, அந்த பேட்டியை குரு கலாம் மிகவும் விரும்பிப் படித்தார் என்றும், தவறே இல்லாமல் அது வந்திருப்பதாகவும் கூறியதாக டாக்டர் கோட்டா என்னிடம் தெரிவித்தபோது எனக்கு அளவு கடந்த மகிழ்ச்சி ஏற்பட்டது.
முதல் குழந்தை அடி...
அவருடைய இதயத்தில் நான் எடுத்து வைத்த முதல் குழந்தை அடி அதுவாகும். ஒரு விஞ்ஞானிக்கும் - பத்திரிகையாளருக்குமான உறவு பிறந்தது அப்போது.
என்னை ஏற்றுக் கொண்டார்...
2002 முதல் 2003 வரை என் மீதான அவருடைய நம்பிக்கை வேகமாக வளர்ந்தது. என்னை ஒரு சிறந்த எழுத்தாளர் என்று அவர் ஏற்றுக் கொள்ள ஆரம்பித்தார். குடியரசுத் தலைவர் வேட்பாளராக அவருடைய பெயர் அறிவிக்கபப்ட்டபோது, அவருக்கு நான் கையால் எழுதிய கடிதம் ஒன்றை சென்னைக்கு அனுப்பினேன். "சார், நீங்கள் இந்தியாவின் குடியரசுத் தலைவராக பதவியேற்ற பின்னர் எனக்குத்தான் முதல் பேட்டி கொடுப்பீர்கள் என்று நம்புகிறேன் என்று அதில் கூறியிருந்தேன்.
தொழில்நுட்ப புரட்சி...
2002ம் ஆண்டு ஜூலை மாதம், ராமேஸ்வரத்திலிருந்து வந்த இந்த "பேப்பர் பாய்" ராஷ்டிரபதி பவனுக்குள் நுழைந்தார். சாதாரண மனிதர்களுடன் எளிதில் தொடர்பு கொள்ளக் கூடிய வகையில் தொழில்நுட்ப புரட்சியை ஏற்படுத்தினார். அப்போது டெக்னாலஜி இன்டர்பேஸ் இயக்குநராக இருந்த வி பொன்ராஜ் செய்த காரியங்களும், முயற்சிகளும் பாராட்டுக்குரியவை.
முதல்பேட்டி...
குடியரசுத் தலைவரான பின்னர் 2 மாதங்களுக்குப் பிறகு பெங்களூருக்கு அவர் முதல் முறையாக வந்தார். தனது வார்த்தையை காப்பாற்றினார். ஆம். குடியரசுத் தலைவராக எனக்கு முதல் பேட்டியை அவர் கொடுத்தார். வழக்கமான மரபு, மரியாதை சம்பிரதாயங்களுக்குப் பின்னர் எனக்கு 5 நிமிடம் கொடுத்து கேள்விகளைக் கேட்குமாறு கேட்டுக் கொண்டார் கலாம். நேரம் இரவு 8 மணி. இடம் ராஜ்பவன், பெங்களூரு. " மற்ற கேள்விகளையெல்லாம் எனக்கு மெயில்ல அனுப்பிருங்க சரியா" என்று என்னிடம் கூறினார் கலாம். அப்போது அருகில் இருந்த அப்போதைய கர்நாடக ஆளுநர் டி.என். சதுர்வேதி, என்னை ஒரு மாதிரியாக பார்த்தது இன்னும் எனக்கு நினைவில் உள்ளது.
5 நிமிடங்கள்... 3 கேள்விகள்
5 நிமிடங்கள், குடியரசுத் தலைவரிடம் 3 கேள்விகள் என தலைப்புப் போட்டு அடுத்த நாள் பேட்டியைக் கொடுத்தேன். மீடியா உலகுக்கு அந்தப் பேட்டி ஒரு சாதாரண ஸ்கூப் மட்டுமல்ல, புரட்சியாகவும் அமைந்தது.
கேக்குடன் ஆஜர்...
அவருடைய பல பிறந்த நாளின்போது, அவர் எங்கிருந்தாலும் எப்படியாவது ஒரு கேக்குடன் போய் விடுவேன். அப்படித்தான் ஒரு நாள் நள்ளிரவின்போது நான் கேக்குடன் போயிருந்தேன். அது ஒரு சாதாரண அலங்காரம் இல்லாத அரசு விருந்தினர் விடுதி. என்னைப் பார்த்தும், மறுபடியும் வந்துட்டியா என்றார் கலாம். சில நேரங்களில் இரண்டு கேக் வந்திருக்கும். ஒன்று அவருடைய உதவியாளர்கள் கொண்டு வந்திருப்பார்கள். இன்னொன்று அடியேனுடையதாக இருக்கும்.
சூரியனின் இன்னொரு சுற்றுப் பாதை...
அவர் இரு கேக்குகளையும் வெட்டுவார். இரண்டு கேக்கிலும் பொருத்தப்பட்டிருக்கும் மெழுகுவர்த்திகளை ஊதி அணைப்பார். கேக் வெட்டி முடித்ததும் தனது பாதுகாவலர்களுக்கும் மறக்காமல் கேக்கைக் கொடுப்பார். அனைவருக்கும் கேக் போய் விட்டதா என்பதையும் கவனமாக கேட்டுக் கொள்வார். சூரியனின் இன்னொரு சுற்றுப் பாதையாக நான் மாறி விட்டேன் என்று சிரித்துக் கொண்டே கூறுவார். அப்போது தவறாமல் அவருடைய கண்களில் மின்னல் வெட்டும்.
காசு வாங்க மறுப்பு...
ஒருமுறை நான் கேரளாவில் கேக் ஆர்டர் செய்தபோது, அந்த கேக் கடை உரிமையாளர் என்னிடம் பணம் வாங்க மறுத்தார். காரணம், கேக்கில் ஹேப்பி பர்த்டே டாக்டர் கலாம் என்று பெயர் பொறிக்கச் சொன்னதால். இப்படி காசு கொடுக்காமல் கேக் வாங்கினால் அதை கலாம் விரும்ப மாட்டார், பாராட்ட மாட்டார் என்று அவரிடம் கூறிய பிறகு அவர் அரை மனதுடன் வாங்கிக் கொண்டார்.
கண்கள் பனித்த தருணம்...
2011ம் ஆண்டு அவருடைய பிறந்த நாளின்போது கோவையில் இருந்தேன். இப்போதும் ஒரு கேக் தயார். ஆனால் அடுத்த நாள் பிறந்த நாள் குழந்தையான அவர் எனக்கு ஒரு கிப்ட் கொடுத்தார். எல்லோரிடமும் என்னை அறிமுகப்படுத்தியபோது, பெங்களூரிலிருந்து வந்துள்ள எனது நண்பர் இவர். பெரிய எழுத்தாளர் என்றார் கலாம். எனது கண்கள் பனித்துப் போய் விட்டன.
ஆசிர்வாதம்...
நான் எனது தாயாரை இழந்தபோது, கலாம் அவர்கள் என்னிடம் சொன்னார்... உனது எழுத்துப் பயணத்தில் உச்சத்தைத் தொட்டு உனது தாயாரை பெருமைப்படுத்த வேண்டும் என்றார். எனது எடிட்டருடன் ஒருமுறை எனக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டபோது, நான் அந்த செய்தித் தாளிலிலிருந்து விலக விரும்பினேன். அப்போது கலாம் அவர்கள் சொன்னார்.. மாற்றம் எப்போதுமே உன்னை வலிமைப்படுத்தும் என்று. அந்த வார்த்தைகள் என்னுள் அப்படியே தங்கி விட்டன. இதழியலில் நான் டாக்டர் பட்டம் பெற்றபோது அவர் என்னை ஆசிர்வதித்து, உனது தாயார் இப்போது பெருமை அடைந்திருப்பார் என்றார்.
பீட்ஸ் இதழ்
2007ம் ஆண்டு நவம்பர் 14ம் தேதி குழந்தைகள் தினத்தின்போது, ஹைதராபாத்தில் உள்ள சத்யம் கெஸ்ட் ஹவுஸில் நள்ளிரவைத் தாண்டி நானும் கலாம் அவர்களம் அமர்ந்து அவருடைய கனவு இ பேப்பரான பில்லியன் பீட்ஸ் இதழுக்கு இறுதி வடிவம் கொடுத்துக் கொண்டிருந்தோம்.
கரீம் நகரில் லட்சத்திற்கும் மேற்பட்ட பள்ளிச் சிறார்களுக்கு மத்தியில் அந்த இ பேப்பர் தொடங்கி வைக்கப்பட்டபோது. அப்போது கலாம் அவர்களை எடிட்டரா அறிவித்தபோது அவருக்கு ஆச்சரியமாகி விட்டது.
நெகட்டிவ் செய்திகள்...
அவர் அடிக்கடி சொல்வார், இந்தியர்கள் குறித்த பாசிட்டிவான செய்திகளை நிறைய கொடுங்கப்பா. எப்போது பார்த்தாலும் நீங்கள் (பத்திரிகையாளர்கள்) நெகட்டிவ் செய்திகளையே கொடுக்கிறீர்கள். எனக்கு டயர்ட் ஆகி விட்டது அவற்றைப் படித்து என்பார்.
தத்து சகோதரி...
கலாமுடன் எனது கடைசி சந்திப்பு 2015, ஜூன் 25ம் தேதி பெங்களூரில் நிகழ்ந்தது. எனது 24 வயது தத்து சகோதரியை அவரிடம் அறிமுகப்படுத்தி வைத்தபோது அவர் மகிழ்ச்சி அடைந்தார். எனது சகோதரி தான்யா பிரிட்டில் போன்ஸ் என்ற நோயால் அவதிப்படுபவர். அவரைச் சந்தித்ததில் கலாம் மகிழ்ச்சி அடைந்தார். இருவரும் ஏதோ நீண்ட காலம் பழகிய நண்பர்கள் போல அப்படி அன்னியோன்யமாக பேசிக் கொண்டார்கள்.
உன்னைக் கடவுள் ஆசிர்வதிப்பார்...
நான் அங்கிருந்து கிளம்பும்போது அவரது காலைத் தொட்டு வணங்கினேன். அப்போது கலாம் அவரக்ள், உன்னைப் பார்த்துப் பெருமைப்படுகிறேன். சிறப்புக் குழந்தைகளுக்கு செய்யும் சேவை கடவுளுக்குச் செய்யும் சேவையாகும். உன்னைக் கடவுள் ஆசிர்வதிப்பார் என்றார்.
பாலமாக இருந்தவர்...
குரு கலாமுக்கும், எனக்கும் பாலம் போல இருந்தவர் ஆர்.கே. பிரசாத்தான். அவர்தான் கலாம் அவர்களிடம் நீண்ட காலமாக தனிப்பட்ட உதவியாளராக இருந்தவர். எங்களது உறவிலும், சந்திப்பிலும் எப்போதும் ஒரு புதுமை இருக்க பிரசாத்தான் காரணம்.
நாட்டு மக்களுக்கு எனது தாழ்மையான வேண்டுகோள்...
ஒரு பத்திரிகையாளராக, நாம் எல்லாவற்றையும் குருட்டுத்தனமாக பாராட்டுகிறோம், கைதட்டுகிறோம் என்பது எனது எண்ணம். நாடு எல்லாவற்றையும் எளிதில் மறந்து விடும். எந்த நாடு அதிகம் பேசுகிறதோ அந்த நாடு குறைவாகவே செயல்படும். குரு கலாமுக்காக நாம் இதை மாற்ற முடியாதா?
அசாதாரண மனிதர்...
நினைவில் கொள்ளுங்கள், ஒரு அசாதாரண மனிதர், வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்திருக்கிறோம். நம் அனைவரிடத்திலும் அவர் ஏதாவது ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார். நாம் அவரைப் பற்றி தெரிந்த நாள் முதல் அவரை இதயத்தில் ஏற்றி வைத்து வந்துள்ளோம்.
நான், நீங்கள், நாம்...
நம் ஒவ்வொருவருக்குள்ளும் டாக்டர் ஏபிஜே அப்துல் காலம் வாழ்கிறார், இருக்கிறார். அவர் மகிழ்ச்சியான மனிதராக இறந்திருப்பார் என்று நீங்கள் கருதினால், நான் அதிலிருந்து மாறுபடுகிறேன். அவர் மனசு நிறைய நம்பிக்கையுடன்தான் இறந்திருக்கிறார். அந்த நம்பிக்கைதான் நான், நீங்கள், நாம்.
கலாமின் கனவு...
இந்தியா ஒரு வல்லரசாக வேண்டும். வளர்ந்த நாடாக வேண்டும். அதுதான் அவர் பார்க்காமல் போனது. அதை நாம் என்று நிறைவேற்றுகிறோமோ அன்றுதான் அவர் மகிழ்ச்சியான மனிதராக இருப்பார்.
மிஸ் செய்கிறேன் சார்...
இன்று நம்மிடையே கலாம் இருந்திருந்தால், அவர் கேட்டிருப்பார்.. அனைவரும் என்னுடன் சேர்ந்து சொல்வீர்களா.. எனது தேசியக் கொடி எனது இதயத்தில் பறக்கிறது. நான் நாட்டுக்கு பெருமையைத் தேடிக் கொண்டு வந்து சேர்ப்பேன்.... குரு கலாம் போன்ற உண்மையான கர்மயோகிகள் இதுபோல்தான் தங்களது சகோதர இந்தியர்களிடம் கேட்பார்கள்.
நாம் செயல்பட வேண்டிய நேரம் வந்து விட்டது.
நான் உங்களை நிறைய மிஸ் செய்கிறேன் சார்...