"ஆங்கிரி பேர்ட்" ஆன விஜயகாந்த்… கையை பிடித்து அமைதிப்படுத்திய 'திமுக' சிவா!
டெல்லி: ஜெயா டிவி செய்தியாளர் மீது கோபப்பட்டு ஆவேசத்துடன் அடிக்கப் பாய்ந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தை திமுக ராஜ்யசபா உறுப்பினர் திருச்சி சிவா அமைதிப்படுத்தி அமரவைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் தலைமையில் அனைத்துக் கட்சிக் குழுவினர் பிரதமர் மோடியை இன்று டெல்லியில் சந்தித்தனர். இந்த சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய விஜயகாந்த், காவிரியில் கர்நாடகா புதிய அணைகட்டுவதை தடுக்க அனைத்து கட்சி குழுவினர் வலியுறுத்தியதாக தெரிவித்தார். மேலும் ஆந்திர துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த தமிழர் குடும்பங்களுக்கு ரூ.25 லட்சம் தரவேண்டும் என பிரதமரிடம் வலியுறுத்தியதாக தெரிவித்தார்.
தமிழக நலனுக்காக நாங்கள் இங்கு வந்துள்ளோம். தமிழகத்தில் செம்மர தொழிலாளர்கள் கொல்லப்பட்டதில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினேன். இரு அரசாங்கத்திடமும் பேசி நல்லது செய்வதாக பிரதமர் உறுதி அளித்துள்ளதாக தெரிவித்தார்.
அப்போது அரசியல் கூட்டணி குறித்து யாரும் கேள்வி எழுப்ப வேண்டாம். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு ரொம்ப மோசமாக உள்ளது என்றார். இவ்வாறு விஜயகாந்த் பேசிக்கொண்டிருந்த போது தமிழக அரசியல் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதனையடுத்து கோபம் கொண்ட விஜயகாந்த், யார் நீ? எந்த டிவி ரிப்போர்ட்ர் என்றார். ஜெயா டிவி, தினமலர் கேட்டா பதில் சொல்ல முடியாது என்று கூறியவாரே இருக்கையை விட்டு எழுந்தார்.
இதனையடுத்து அவரது அருகில் இருந்த திமுக ராஜ்யசபா எம்.பி திருச்சி சிவா அவரது கையைப் பிடித்து சமாதானப்படுத்தி அமரவைத்தார். இன்றைய செய்தியாளர் சந்திப்பில் அவ்வப்போது விஜயகாந்தின் கையை திருச்சி சிவா பிடித்து கூல்படுத்தியவாரே இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
வடிவேலு வசனம் போலத்தான் இருக்கிறது விஜயகாந்த்தின் நிலை.. ஆரம்பம் எல்லாம் நல்லாத்தான் இருக்கு.. ஆனா பினிஷிங்ததான் சொதப்பி எடுத்து விடுகிறார் மனிதர்!