3 முறை தலாக்... மனைவிகள் கொலை செய்யப்படுவதை தடுக்கிறது- இஸ்லாமிய தனிநபர் சட்ட வாரியம்
டெல்லி: மூன்று முறை தலாக் கூறுவது ஆண்கள் தங்களின் மனைவிகளை கொலை செய்வதை தடுப்பதாக அனைத்து இந்திய இஸ்லாமிய தனிநபர் சட்ட வாரியம் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இஸ்லாத்தில் மூன்று முறை தலாக் கூறும் முறையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் அனைத்து இந்திய இஸ்லாமிய தனிநபர் சட்ட வாரியம் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் கூறியிருப்பதாவது,
மூன்று முறை தலாக் கூறுவது ஆண்கள் தங்கள் மனைவிகளை கொலை செய்வதை தடுக்கிறது. மேலும் பலதாரம் முறைக்கு தடை விதிப்பது கள்ளத்தொடர்பை ஊக்குவிக்கும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இது குறித்து அனைத்து இந்திய இஸ்லாமிய தனிநபர் சட்ட வாரிய உறுப்பினர் எஸ்.க்யூ.ஆர். இல்யாஸ் கூறுகையில்,
தனிநபர் சட்டங்களில் தலையிட உச்ச நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்பதை வாரியம் தெரிவிக்க விரும்புகிறது. தனிநபர் சட்டங்கள் நீதித் துறையின் கீழ் வராது. இது மதத்தின் சுதந்திரம்.
மூன்று முறை தலாக் கூறும் முறையை புறக்கணிக்க முடியாது. சில சமயம் விவாகரத்து இன்றியமையாதது. அது போன்ற நேரங்களில் மூன்று முறை தலாக் கூறுவது பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கிறது. உச்ச நீதிமன்றத்தில் வாரியம் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் கூறியிருப்பதில் தவறு எதுவும் இல்லை.
அதிர்ஷ்டவசமாக இஸ்லாமிய சமூகத்தில் வரதட்சணை கொலைகள், மனைவியை கொலை செய்வது இல்லை. இதற்கு காரணம் மூன்று முறை தலாக் கூறும் முறை. விவாகரத்து பெறும் முறையை கடினமாக்கினால் எது வேண்டுமானாலும் நடக்கும்.
என் மனைவிக்கு விவாகரத்து வேண்டும் என்று நினைத்தால் அவர் தாராளமாக நீதிமன்றத்தை நாடலாம். இஸ்லாத்தில் பலதார மணம் அனுமதிக்கப்படுகிறது, கட்டாயம் இல்லை. அது இல்லை என்றால் கள்ளத்தொடர்புகள் அதிகரிக்கும். மனைவிக்கு உடல் நலம் சரியில்லை அல்லது குழந்தை பேறு இல்லை என்றால் பலதார மணம் செய்யலாம்.
பெண்ணிடம் பிரச்சனை என்பதற்காக விவாகரத்து கொடுப்பது கொடூரம். அதுவே வேறு ஒரு பெண்ணை மணந்தால் கணவனால் முதல் மனைவியையும் கவனித்துக் கொள்ள முடியும். இந்த விஷயத்தில் உச்ச நீதிமன்றம் தலையிடாது என்று நம்புகிறோம்.
இந்த தலாக் முறையில் தலையிடுவது மத சுதந்திரத்தில் தலையிடுவது ஆகும் என்றார்.