உண்மை காதல்: மனைவிக்கு சிறுநீரகத்தை பரிசளித்த கணவர்
டெல்லி: உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர் தனது மனைவிக்கு தன்னுடைய சிறுநீரகங்களில் ஒன்றை பரிசளித்து அவரின் உயிரை காப்பாற்றியுள்ளார்.
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள காசியாபாத்தைச் சேர்ந்தவர் அருண் தல்வார். தொழில் அதிபர். அவரது மனைவி பூஜா தல்வாரின் சிறுநீரகங்கள் செயல் இழந்துவிட்டன. இதையடுத்து அவர் நொய்டாவில் உள்ள போர்டிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். கடந்த 5 மாதங்களாக பூஜாவுக்கு டயாலிசிஸ் செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில் பூஜாவுக்கு தன்னுடைய சிறுநீரங்களில் ஒன்றை அளிக்க முன்வந்தார் அருண். ஆனால் அவரது சிறுநீரகம் பூஜாவுக்கு பொருந்தவில்லை. இதற்கிடையே 22 வயது வாலிபர் ஒருவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய உள்ளது பற்றி அருண் கேள்விப்பட்டார். அந்த வாலிபருக்கு அவருடையை தாய் தன்னுடைய சிறுநீரகத்தை அளிக்க முன்வந்தார். ஆனால் அது பொருந்தவில்லை.
வாலிபரின் தாயின் சிறுநீரகம் பூஜாவுக்கு பொருந்தியது. அதேபோன்று அருணின் சிறுநீரகம் அந்த வாலிபருக்கு பொருந்தியது. இதையடுத்து அருண் தன்னுடைய சிறுநீரகத்தை அந்த வாலிபருக்கு அளித்தார். பதிலுக்கு அந்த வாலிபரின் தாய் தன்னுடைய சிறுநீரகத்தை பூஜாவுக்கு அளித்தார்.
அறுவை சிகிச்சைக்கு பிறகு பூஜாவும், அந்த வாலிபரும் நலமாக உள்ளனர். வழக்கமாக பெண்கள் தான் கணவருக்கோ, மகனுக்கோ சிறுநீரகத்தை தானம் செய்வார்கள். கணவர் மனைவிக்கு சிறுநீரகத்தை தானம் செய்வது அரிது என்று அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் துஷ்யந்த் நாடார் தெரிவித்துள்ளார்.