அதிமுகவிற்கு குடும்ப அரசியல் என்றால் என்னென்னே தெரியாதாம்… சொல்கிறார் தம்பிதுரை
இரட்டை இலை சின்னத்தை மீண்டும் பெறுவதற்காக சாதாரண தொண்டனாக கட்சியை இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன் என்று லோக் சபா துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியுள்ளார்.
டெல்லி: பிளவுபட்டுள்ள அதிமுகவை இணைக்க முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக லோக் சபா துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் அதிமுகவிற்குள் குடும்ப அரசியல் என்றால் என்னவென்றே தெரியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மறைவிற்கு பின்னர், அதிமுக அணி பிளவுபட்டுள்ளது. அதன் பிறகு இரு அணிகளும் ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டி வந்தனர். ஆர். கே. நகர் இடைத்தேர்தலிலும் தனித்தனியாக வேட்பாளர்களை நிறுத்தினார்கள்.
இந்நிலையில், இரு அணிகளும் இணைவது குறித்து ஓபிஎஸ் மற்றும் சசிகலா கோஷ்டியினர் பேசி வருகின்றனர். இதுகுறித்து தம்பிதுரை செய்தியாளர்களிடம் பேசியதாவது:
பிளவு
அதிமுகவில் பிளவு என்பதே இல்லை. ஒரு சில கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்திருந்தார்கள். தொண்டர்களுடைய எதிர்ப்பார்ப்பிற்கு மதிப்பளித்து மீண்டும் இணைவதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற உள்ளது.
குடும்பம் ஆட்சி
அதிமுகவில் குடும்ப அரசியல் என்பது கிடையவே கிடையாது. எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தே குடும்ப அரசியல் என்பது அதிமுகவில் கிடையாது. இப்போதும் குடும்ப அரசியல் என்பது கிடையாது. இது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு.
நிபந்தனையற்ற பேச்சு
ஓபிஎஸ் நிபந்தனையற்ற முறையிலேயே பேச்சுவார்த்தை நடத்தப் போவதாக அறிவித்துள்ளார். அமைச்சர்கள் எல்லாம் பேசி அவர்களுக்கு எதிர்ப்பார்ப்புகள் இருந்தால் அவற்றையும் பேசி சுமூகமான முறையில் பேச்சுவார்த்தை நடத்தப்படும்.
சின்னம் மீட்பு
சாதாரண தொண்டன் என்ற முறையில் கட்சியையும் ஆட்சியையும் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். மக்கள் வாக்களித்த இரட்டை இலை சின்னத்தை காப்பாற்ற வேண்டும். எனவே, சின்னத்தை மீண்டும் பெற்று விடுவோம்.