இரட்டை இலைக்காக லஞ்சம்: டெல்லி போலீஸ் முன் நேரில் ஆஜரானார் டிடிவி தினகரன்
இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுத்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்காக டிடிவி தினகரன் டெல்லி போலீசார் முன் ஆஜராகியுள்ளார்.
டெல்லி : லஞ்சப் புகார் வழக்கில் டிடிவி தினகரன் டெல்லி குற்றப்பிரிவு போலீசார் முன்பு நேரில் ஆஜராகி விளக்கம் அளித்து வருகிறார்.
அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையத்திடம் இருந்து பெற்றுத் தர புரோக்கர் சுகேஷ் சந்தர் என்பவருக்கு பணம் கொடுத்ததாக டிடிவி தினகரன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
கடந்த 17ம் தேதி இரவு டெல்லியின் தெற்கு பகுதியில் நடத்திய ஆய்வின் போதுசுகேஷ் சந்தர் 1 கோடியே 30 லட்சம் பணத்துடன் போலீசாரிடம் சிக்கினார். சுகேஷ் போலுசிடம் அளித்த வாக்குமூலத்தில் இரட்டை இலை சின்னத்தை பெற்றுத் தர 60 கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டது தினகரன் முன் பணம் கொடுத்ததாகக் கூறினான்.
சம்மன்
இதன் அடிப்படையில் டிடிவி தினகரன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இன்று விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி போலீஸ் சம்மன் அளித்திருந்தது. நேரில் ஆஜராக இன்று காலையில் டெல்லி சென்றார் டிடிவி தினகரன்.
ஆஜர்
12 மணியளவில் டெல்லி சென்ற தினகரன் 3 .15 மணியளவில் சாணக்யாபுரியில் உள்ள காவல்நிலையத்தில் ஆஜராகியுள்ளார். தினகரனுடன் 3 வழக்கறிஞர்கள் குழுவும் வந்துள்ளன.
சராமரி கேள்வி
தினகரனிடம் நேருக்கு நேர் விசாரணை நடத்துவதற்காக புரோக்கர் சுகேஷ் சந்தரம் காவல்நிலையம் அழைத்து வரப்பட்டார். டிடிவி தினகரனிடம் டெல்லி போலீசார் சராமரியாக கேள்வி கேட்டு வருகின்றனர்.
கைதாக வாய்ப்பு
இன்று இரவு வரை இந்த விசாரணை நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விசாரணையின் முடிவில் ஒரு வேளை குற்றம் நிரூபிக்கப்பட்டால் தினகரன் கைது செய்யப்படலாம் என்பதால் அங்கு பரபரப்பு நிலவுகிறது.