மாறி மாறி பேசிய டிடிவி தினகரன்! சுகேஷுடன் ஒரே அறையில் நடந்த விசாரணைக்கு பிறகு கைது!!
டெல்லி: இரட்டை இலைச் சின்னத்தை பெற லஞ்சம் கொடுத்த வழக்கில் டிடிவி தினகரனை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். நான்கு நாட்கள் விசாரணைக்குப் பிறகு டெல்லி போலீசார் நள்ளிரவில் டிடிவி தினகரனையும் அவரது நண்பர் மல்லிகார்ஜூனாவையும் கைது செய்துள்ளனர்.
அதிமுகவின் இரு அணிகளும் இரட்டை இலைச் சின்னத்துக்கு போட்டி போட்டதால் தேர்தல் ஆணையம் இரட்டை இலையை முடக்கியது. இதுதொடர்பான வழக்கு தேர்தல் ஆணையத்தில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் இரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க பெங்களூரைச் சேர்ந்த சுகேஷ் சந்திரா என்ற இடைத்தரகர் மூலம் முயன்றதாக டிடிவி தினகரன் மீது டெல்லி போலீஸ் வழக்குப்பதிவு செய்தது. சுகேஷிடம் தினகரன் இரட்டை இலைச் சின்னத்தை பெற்றுத் தருமாறு கூறி ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் லஞ்சமாக கொடுத்துள்ளார்.
கடந்த 17ஆம் சிக்கிய சுகேஷ்
மேலும் இரட்டை இலைச்சின்னத்தை பெற சுகேஷ் சந்திரசேகரிடம், டிடிவி தினகரன் 60 கோடி ரூபாய் வரை பேரம் பேசியது விசாரணையில் தெரியவந்தது.
தெற்கு டெல்லியில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருந்த சுகேஷ் சந்திராவிடம் இருந்து ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் பணத்தை கடந்த 17ஆம் தேதி டெல்லி போலீசார் பறிமுதல் செய்தனர்.
சுகேஷ் யார் என்றே தெரியாது
இதுதொடர்பாக டிடிவி.தினகரன் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் கடந்த சனிக்கிழமை முதல் அவரிடம் விசாரணை நடத்தி வந்தனர். முதலில் சுகேஷ் சந்திரசேகர் யார் என்றே எனக்கு தெரியாது என டிடிவி.தினகரன் கூறினார்.
ஒரே அறையில் விசாரணை
இதைத்தொடர்ந்து இன்றைய விசாரணையின் போது டிடிவி தினகரன் யார் என்றே தனக்கு தெரியாது என சுகேஷ் கூறிதாக தகவல் வெளியானது. இந்நிலையில் நேற்று 4 வது நாளாக பலமணி நேரம் விசாரணை நடைபெற்றது. அப்போது சுகேஷ் மற்றும் டிடிவி தினகரனை ஒரே அறையில் வைத்து நேருக்கு நேர் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
நள்ளிரவில் கைது
இதைத்தொடர்ந்து டிடிவி தினகரன், அவரது நண்பர் மல்லிகார்ஜுனா மற்றும் அவரது உதவியாளர் ஜனார்தனா ஆகியோரை நள்ளிரவில் டெல்லி போலீசார் கைது செய்தனர். அதிமுக அம்ம அணியின் துணைப் பொதுச்செயலாளரான டிடிவி தினகரன் நள்ளிரவில் கைது செய்யப்பட்ட சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.