இரட்டை இலைக்காக லஞ்சம்: டிடிவி தினகரன் டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்!
இரட்டை இலைக்காக லஞ்சம் கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள டிடிவி தினகரன் டெல்லியில் உள்ள தீஸ் ஹசாரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
டெல்லி: இரட்டை இலைக்காக லஞ்சம் கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள டிடிவி தினகரன் டெல்லியில் உள்ள தீஸ் ஹசாரி நீதிமன்றத்தில் பலத்த பாதுகாப்புகளுக்கு மத்தியில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார்.
இரட்டை இலை சின்னத்தை பெற தினகரன் தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுப்பது தொடர்பாக ரகசிய தகவல் கிடைத்தது. அதையடுத்து டெல்லி போலீஸார் நட்சத்திர விடுதிகளில் மேற்கொண்ட சோதனைகளில் இடைத்தரகர் சுகேஷ் சந்திரா என்பவரை கைது செய்து அவரிடம் இருந்த ரூ.1.30 கோடி ரொக்கத்தை பறிமுதல் செய்தனர்.
இதைத் தொடர்ந்து தினகரன் மீதான புகார் தொடர்பாக நேரில் வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என்பதற்கான சம்மனை தினகரனிடம் வழங்க டெல்லி போலீஸார் சென்னைக்கு வந்தனர். அதைத் தொடர்ந்து சம்மனில் குறிப்பிட்டதுபோல் தினகரன் கடந்த 22-ஆம் தேதி டெல்லி போலீஸாரிடம் ஆஜரானார்.
இந்நிலையில் கிட்டத்தட்ட 4 நாள்கள் தினகரனிடம் விசாரணை நடத்தப்பட்டது. எனினும் அவர் குற்றத்தை ஒப்புக் கொள்ளவில்லை இருவரும் பேசிய ஆடியோ உரையாடல் ஆதாரத்தை சமர்ப்பித்தும் அவர் மசியவில்லை.
இதைத் தொடர்ந்து சுகேஷை தினகரன் இருந்த அறைக்குஅழைத்து சென்று நேருக்கு நேர் விசாரணை நடத்தினர். அப்போது ஹவாலா கும்பல் மூலம் தினகரன் தமக்கு பணம் கொடுத்ததாக சுகேஷ் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து உண்மையை ஒப்புக் கொண்ட தினகரன் நேற்றிரவு கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் அவர் தீஸ்ஹசாரி நீதிமன்றத்தில் தற்போது ஆஜர்படுத்தப்பட்டார். அவருடன் நண்பர் மல்லிகார்ஜூனாவும் அழைத்துச் செல்லப்பட்டார். இதற்காக நீதிமன்றத்தை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.