தினகரன் மீதான தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுத்த வழக்கு சிபிஐக்கு மாற்றம்?
தேர்தல் ஆணையத்துக்கு அதிமுக அம்மா அணி துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கு விரைவில் சிபிஐக்கு மாற்றப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
டெல்லி: தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுத்த புகாரில் கைது செய்யப்பட்டுள்ள டிடிவி தினகரன் மீதான வழக்கு விரைவில் சிபிஐக்கு மாற்றப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
விரைவில் முதல்வர் பதவிக்கு வந்து விட வேண்டும் என்று அவசரம் காட்டிய சசிகலா பொதுச்செயலாளராக பதவியேற்ற பத்தே நாளில் சொத்து குவிப்பு வழக்கில் சிறைத்தண்டனை பெற்று பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டார். சசிகலா கட்சிப் பொறுப்புகள் அனைத்தையும் துணைப்பொதுச்செயலாளராக டிடிவி தினகரனை நியமித்து ஒப்படைத்து சென்றார்.
அவருக்கும் அதிகார ஆசை ஒட்டிக்கொள்ள ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணத்தை வாரி இறைத்தார். தினகரனுக்கு பக்கபலமாக இருந்த அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் இருந்த ஏராளமான ஆவணங்களை பறிமுதல் செய்தது வருமான வரித்துறை.
ஆர்கே நகர் தேர்தல்
இடைத்தேர்தலில் எப்படியும் வெற்றி பெற 89 கோடி ரூபாய் வரை பணம் கொடுக்க தயாராக இருந்த ஆவணங்களும் அதில் சிக்கின. இதையடுத்து ஆர்கே நகர் தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டது.
இரட்டை இலை சின்னம்
பின்னர் இரட்டை இலை சின்னத்தை யார் பெறுவது என்று அதிமுக அம்மா அணிக்கும், அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இதிலும் தினகரன் அவசரப்பட்டு இடைத்தரகர் ஒருவர் மூலம் தேர்தல் ஆணையத்திற்கு 50 கோடி ரூபாய் வரை கொடுப்பதற்கு பேரம் பேசி முன்பணம் கொடுத்தார். ஆனால் தினகரனின் புரோக்கர் சுகேஷ் டெல்லி போலீஸில் சிக்கிக்கொண்டார். இதனால் தினகரன் மீது வழக்கு பாய்ந்து தற்போது கைது செய்யப்பட்டு விசாரணைக்காக சென்னை அழைத்து வரப்பட்டுள்ளார்.
டெல்லி போலீஸ் விசாரணை
தேர்தலில் வாக்காளர்களுக்கு கொடுக்க 89 கோடி ரூபாய் பணம், சின்னத்தை பெற தேர்தல் ஆணையத்துக்கு 50 கோடி ரூபாய் பேரம் என கோடிக்கணக்கில் பணப்பரிமாற்றம் செய்ய திட்டமிட்ட தினகரனுக்கு எப்படி இவ்வளவு பணம் கிடைத்தது, இவையனைத்தும் ஹவாலா பணமா என்ற கோணத்திலும் டெல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆதாரங்கள்...
டிடிவி தினகரன் மீது இந்திய தண்டனைச் சட்டம் 170, 120 பி, ஊழல் தடுப்புச்சட்டம் 1988 ஆகிய பிரிவுகளின் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் டெல்லி போலீசின் முதல் தகவல் அறிக்கையில் லஞ்ச பேர விவகாரம் குறித்து தினகரன், சுகேஷ் இருவரும் நடத்திய உரையாடல் ஆதாரங்கள் இருப்பதாகவும், சிக்னல் கிடைக்காத நேரத்தில் வாட்ஸ்அப்பில் பரிமாறிக்கொண்ட ஆதாரங்களும் உள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிபிஐக்கு மாற்றம்
பொதுவாக லஞ்ச வழக்குகளில் மாநில அரசு தொடர்புடைய அதிகாரிகள், அலுவலர்கள் ஈடுபட்டிருந்தால் மட்டுமே அந்த மாநில காவல்துறை விசாரிக்க முடியும், இந்த வழக்கில் தேசிய அமைப்பான இந்திய தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவருக்கும் தொடர்பு இருப்பதாக சொல்லப்படுவதால், மத்திய அமைப்புகளை விசாரிக்கும் அதிகாரம் பெற்ற சிபிஐக்கு இந்த வழக்கு மாற்றப்படும் என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.