சுகேஷ் சந்திரா யார் சார்? எனக்குத் தெரியாதே... டிடிவி தினகரன் கமுக்கம்
தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட சுகேஷ் சந்திரசேகர் தனக்கு யாரென்றே தெரியாது என்று டெல்லி விமான நிலையத்தில் டிடிவி தினகரன் தெரிவித்தார்.
டெல்லி: தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட சுகேஷ் சந்திரசேகர் தனக்கு யாரென்றே தெரியாது என்று டெல்லி விமான நிலையத்தில் டிடிவி தினகரன் தெரிவித்தார்.
தேர்தல் ஆணையத்தின் செல்வாக்கை பயன்படுத்தி இரட்டை இலை சின்னத்தை பெற்று தருவதாக இடைத்தரகர் சுகேஷ் சந்திராவுடன் டிடிவி தினகரன் ரூ.60 கோடி பேரம் பேசியதாக தெரியவந்தது. தகவலறிந்த டெல்லி போலீஸார் நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்த சுகேஷிடம் இருந்து ரூ.1.30 கோடி பணம் பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.
இந்த விவகாரத்தில் தினகரன் நேரில் வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று டெல்லி போலீஸார் சென்னையில் தினகரனை நேரில் சந்தித்து சம்மன் அளித்தனர். அதன்படி 22-ஆம் தேதியான இன்று தினகரன் டெல்லி சென்றார்.
டெல்லி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் அளித்ததாக என் மீதான புகார் குறித்து விளக்கம் அளிக்க இங்கு வந்துள்ளேன். டெல்லி போலீஸாரால் கைது செய்யப்பட்ட சுகேஷ் யாரென்றே எனக்கு தெரியாது என்றார் அவர்.