இன்று நவம்பர் 26... கசாப் கைதுக்கு காரணமான தியாகி துக்காராமை நினைவு கூறுவோம் ...!
மும்பை: மும்பையில் 10 பாகிஸ்தான் தீவிரவாதிகள் புகுந்து 3 நாட்கள் வெறியாட்டத்தைத் தொடங்கிய தினம் இன்று.. .அந்த 10 பேரில் உயிருடன் பிடிபட்ட ஒரே நபர் அஜ்மல் கசாப் மட்டுமே. அந்த கசாப்பை உயிருடன் பிடிக்கக் காரணமானவர் சாதாரன சப் இன்ஸ்பெக்டரான துக்காராம். தனது உயிரைத் தியாகம் செய்து கசாப்பைப் பிடித்துக் கொடுத்த தியாகியை இன்று மகாராஷ்டிரா மட்டுமல்லாமல் நாடே நினைவு கூர்கிறது.
ஹேமந்த் கர்கரே, விஜய் சலஸ்கர், அசோக் காம்தே என பல மாவீர காவல்துறை அதிகாரிகள் இந்த தாக்குதலின்போது இன்னுயிரை ஈந்தார்கள். ஆனால் துக்காராம்தான் கசாப்பைப் பிடித்து இந்த தாக்குதலின் அத்தனை பயங்க சதித் திட்டங்களையும் உலகம் அறிய வழி வகுத்தவர்.
துரதிர்ஷ்டவசமாக துக்காராமை நாடு கொண்டாடவி்ல்லை. உரிய முறையில் அவர் கெளரவிக்கப்படவும் இல்லை.
கசாப்பை பிடித்த துக்காராம்
நவம்பர் 26ம் தேதி மும்பையில் தீவிரவாதிகள் தாக்குதலைத் தொடங்கியதுமே உதவி சப் இன்ஸ்பெக்டர் துக்காராம் ஓம்ப்ளே, சப் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் தகதம் ஆகியோர் களத்தில் குதித்தனர்.
மெரைன் டிரைவில்
மெரைன் டிரைவ் பகுதிக்கு விரையுமாறு அவர்களுக்கு உத்தரவு வந்தது. இதையடுத்து இருவரும் அங்கு விரைந்தனர்.
வேகமாக வந்த ஸ்கோடா கார்
அப்போது தீவிரவாதிகள் ஒரு ஸ்கோடா காரில் படு வேகமாக வந்ததைப் பார்த்த துக்காராமும், பாஸ்கரும், அதைப் பிடிக்க முயன்றனர்.
மோட்டார் சைக்கிளில் துணிச்சலுடன் பாய்ந்த துக்காராம்
அதில் துக்காராம் தனது மோட்டார் சைக்கிளில் அந்த காரை விரட்டிச் செல்ல ஆரம்பித்தார். கையில் எந்தவிதமான ஆயுதமும் அவரிடம் இல்லை. துணிச்சல் மட்டுமே துணைக்கு வர காரை துரத்தினார்.
விபத்தில் சிக்கி நின்ற கார்
இந்த நிலையில், அந்தக் கார் செளபாத்தியில் சாலைத் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது.
சரமாரி துப்பாக்கிச்சூடு
இதையடுத்து காரை நோக்கி வேகமாக விரைந்தார் துக்காராம். ஆனால் தீவிரவாதிகள் துக்காராமை சுட ஆரம்பித்தனர்.
டைவ் அடித்துத் தப்பினார்
இதையடுத்து வேகமாக பைக்கை போட்டு விட்டு டைவ் அடித்து கீழே விழுந்து தப்பிய துக்காராம், காரின் பின் பகுதியில் பதுங்கினார்.
துக்காராமை சுட்ட கசாப்
இந்த நிலையில் காரின் பின் பகுதியில் இருந்த கசாப், துக்காராமை சுட ஆரம்பித்தான்.
உடலைத் துளைத்த புல்லட்கள்
ஆனால் தனது உயிரை சற்றும் பொருட்படுத்தாமல் தோட்டாக்களை வாங்கிய துக்காராம், பாஸ்கர், கசாப்பைப் பிடிக்கும் வகையில் கசாப் மீது பாய்ந்து அவனைப் பிடித்துக் கொண்டார். பாஸ்கர் அதி வேகமாக செயல்பட்டு கசாப்பைப் பிடித்தார்.
மருத்துவமனையில் வீர மரணம்
உடலெங்கும் புல்லட்கள் துளைத்திருக்க மருத்துவமனைக்குக் கொண்டு செல்லபப்ட்ட துக்காராம் அங்கு மரணமடைந்தார்.