ஜுனைத் கொலை வழக்கில் டெல்லி அரசு ஊழியர் உட்பட 4 பேர் கைது
நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய ஜுனைத் கான் கொலை வழக்கில் டெல்லி அரசு ஊழியர் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சண்டிகர்: டெல்லி-மதுரா ரயிலில் இஸ்லாமிய சகோதரர்களை வசைபாடி ஜுனைத் என்ற 17 வயது இளைஞரை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவத்தில் டெல்லி அரசு ஊழியர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜுனைத் கான் கொலை வழக்கில் உணவு இன்ஸ்பெக்டரான இன்னொரு அரசு ஊழியர் சந்தேக நபராக அடையாளம் காணப்பட்டுள்ளார். ஆனால் இன்னமும் அவர் கைது செய்யப்படவில்லை.
ஹரியானா போலீஸ் ரமேஷ் என்ற ஒருவரை சம்பவம் நடந்து முடிந்த பிறகு கைது செய்தது. கைது செய்யப்பட்ட 4 பேரில் ஒருவர் ஜுனைத்தையும் அவரது சகோதரரையும் பசு மாமிசம் உண்பவர் என்றும் தேச விரோதி என்றும் திட்டியதோடு கொடூரமாகத் தாக்கியுள்ளனர்.
ஆனால் ஜுனைத்தையும் அவரது சகோதரரையும் கத்தியால் குத்திய அந்த நபர் இன்னமும் போலீசாரிடம் பிடிபடவில்லை. இதனால் அவரைப் பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் குதித்துள்ளனர்.
ரயிலில் பயணம் செய்த பயணிகளில் ஒருவர் கூட இதில் சாட்சி சொல்ல முன்வரவில்லை என்று போலீஸ் அதிகாரிகள் வருத்தம் தெரிவித்தனர். இதனால் கொலையாளியைக் கண்டுபிடிப்பது போலீசுக்கு கடினமாகியுள்ளது.
ஜுனைத் கொலை நாடு முழுவதும் எதிர்ப்பலைகளை கிளப்பியுள்ளது. இதனால், கும்பல் சேர்ந்து தாக்கி, சிறுபான்மை மக்களைக் கொலை செய்வதற்கு எதிராக 'நாட் இன் மை நேம்' என்ற விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்று வருகிறது.
மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், "ஜுனைத் கொலை சம்பவம் மிகவும் வேதனையை அளிக்கிறது, வெட்கக் கேடானது" என்று வன்மையாகக் கண்டனம் தெரிவித்துள்ளார்.