இரட்டை இலை யாருக்கு.. கடைசி நாளான இன்று சசி, ஓபிஎஸ் அணிகள் கட்டுக்கட்டாக ஆவணங்கள் தாக்கல்
இரட்டை இலை சின்னம் தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையத்தில் ஆவணங்கள் தாக்கல் செய்ய கடைசி நாளான இன்று ஓபிஎஸ் மற்றும் சசிகலா அணியினர் கட்டுக்கட்டாக ஆவணங்களை தாக்கல் செய்துள்ளனர்.
டெல்லி: இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்ட விவகாரத்தில் தலைமை தேர்தல் ஆணையகத்தில் ஓபிஎஸ் அணி சார்பில் 20,000 பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டன.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அதிமுக இரண்டு அணியாகப் பிரிந்தது. இரு அணிகளும் தாங்கள் தான் உண்மையான அதிமுகவினர் என்று கூறி இரட்டை இலை சின்னத்துக்கு சொந்தம் கொண்டாடி வருகின்றன.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டபோது இரு அணியினரும் இரட்டை இலை சின்னத்தை கேட்டு கோரிக்கை வைத்தபோது, தேர்தல் ஆணையம் அதிமுக கட்சியையும், இரட்டை இலை சின்னத்தையும் முடக்கி வைத்தது. மேலும், இரு அணிகளையும் பிராமண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்டது.
கடைசி நாள்
இரட்டை சிலை சின்னத்தை முடக்கிய தலைமை தேர்தல் ஆணையம் ஜூன் 16-ம் தேதிக்குள் பிராமண பத்திரங்களை தாக்கல் செய்ய இரு அணிகளுக்கும் உத்தரவிட்டது. அதன்படி இன்று ஆவணங்கள் தாக்கல் செய்ய கடைசி நாளாகும்.
களத்தில் குதித்த ஓபிஎஸ் டீம்
இதனையடுத்து, ஓ.பி.எஸ் அணி சார்பாக கடந்த மார்ச் 20ஆம் தேதி தேர்தல் ஆணையத்திடம், அதிமுக நிர்வாகிகள் 6000 பேர், பிராமண பத்திரம் தாக்கல் செய்தனர். அதன் பின்னர், கடந்த ஏப்ரல் 25ஆம் தேதி, ஓ.பி.எஸ் அணி சார்பாக மீண்டும் 6500 பேர், பிராமண பத்திரம் தாக்கல் செய்தனர்.
கட்டுக்கட்டாக ஆவணம்
அதைத்தொடர்ந்து கடந்த மே 12ஆம் தேதி ஓ.பி.எஸ் அணி தரப்பில் மைத்ரேயன், மனோஜ் பாண்டியன் ஆகியோர் இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக மீண்டும் 12,600 பக்கங்கள் கொண்ட பிராமண பத்திரத்தை தேர்தல் ஆணையத்திடம் கொடுத்தனர். இதையடுத்து ஓ.பி.எஸ். அணி சார்பில் பிராமண பத்திரம் தாக்கல் செய்த பட்டியலின் எண்ணிக்கை 40,000 ஆக உயர்ந்தது. மேலும், ஓ.பி.எஸ். அணி தரப்பில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான பிராமண பத்திரங்களை மனோஜ் பாண்டியன், பாபு முருகவேல் ஆகியோர் மே 29ஆம் தேதி தாக்கல் செய்தனர்.
அதிமுக அம்மா அணி
இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அம்மா அணியினரும், கடந்த மே 30ஆம் தேதி தேர்தல் ஆணையத்திடம் 75,000 பிராமண பத்திரங்களை அமைச்சர் சி.வி.சண்முகம் தாக்கல் செய்தார்.
லாரி லாரியாக ஆவணம்
சசிகலா அணி சார்பில் 3 லட்சத்து 10 ஆயிரம் பிராமண பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. கடந்த 12ம் தேதி 4வது முறையாக சசிகலா அணி சார்பில் அமைச்சர் சி.வி. சண்முகம் 1 லட்சத்து 52 ஆயிரம் பிராமண பத்திரங்களை 4 லாரிகளில் டெல்லிக்குக் கொண்டு செல்லப்பட்டு தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
5வது முறையாக..
இந்நிலையில், 5வது முறையாக நேற்று முன்தினம் 47,151 பிராமண பத்திரங்கள் தேர்தல் ஆணையத்தில் சசிகலா அணி தாக்கல் செய்துள்ளது. சசிகலா அணி மொத்தம் 3,98,632 பிராமண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
ஓபிஎஸ் அணி கூடுதல் ஆவணம்
இந்நிலையில், ஆவணங்கள் தாக்கல் செய்ய கடைசி நாளான இன்று ஓபிஎஸ் தரப்பில் 20,000 ஆவணங்கள் கூடுதலாக இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஓபிஎஸ் அணியின் வழக்கறிஞர் பாபு முருகவேல் தேர்தல் ஆணையத்தில் ஆவணங்களை ஒப்படைத்தார். ஆக, ஓபிஎஸ் அணியினர் இதுவரை 3.80 லட்சம் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.