காஷ்மீர் ராணுவ முகாமில் வாலாட்டிய தீவிரவாதிகள் 2 பேர் சுட்டுக்கொலை
ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளில் இரண்டு பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
யூரி தாக்குதலுக்கு பழி தீர்க்கும் விதமாக இந்திய ராணுவம் சர்ஜிகல் ஸ்டிரைக் நடத்தி 7 தீவிரவாத முகாம்களை அழித்தது. அந்த தாக்குதலின் போது பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் இரண்டு பேர் பலியாயினர். இதனை தொடர்ந்து, இது போன்ற ஊடுருவல் முயற்சிகள், எல்லையில் அத்துமீறல் உள்ளிட்டவற்றை பாகிஸ்தான் அரங்கேற்றி வருகிறது.
ஜம்மு - காஷ்மீர் மாநிலம் குப்புவாரா மாவட்டத்தில் உள்ள ஹன்ட்வாராவின் லங்கேட் பகுதியில் உள்ள ராணுவ முகாம் மீது இன்று காலையில் தீவிரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர். அதையடுத்து நடைபெற்ற சண்டையில் தீவிரவாதிகள் இரண்டு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ராணுவ சீருடை அணிந்து வந்த தீவிரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தியதாகவும், அங்கு தொடர்ந்து சண்டை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், தீவிரவாதிகள் எத்தனை பேர் இந்த தாக்குதலை நடத்தினார்கள் என்று இதுவரை தெரிவிக்கப்படவில்லை.
முன்னதாக, ஜம்மு - காஷ்மீர் மாநிலம் நவ்காம் பகுதியில் நடைபெற்ற இரண்டு ஊடுருவல் முயற்சிகள் மற்றும் ராம்பூரில் நடைபெற்ற மற்றொரு ஊடுருவல் முயற்சி என நள்ளிரவில் நடைபெற்ற, தீவிரவாதிகளின் மூன்று ஊடுருவல் முயற்சிகளை பாதுகாப்பு படையினர் முறியடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.