உ.பியில் மீண்டும் அட்டகாசம்: 2 மைனர் சகோதரிகள் துப்பாக்கி முனையில் 5 பேர் கும்பலால் பலாத்காரம்!
பதான்: உத்திரபிரதேச மாநிலம், பதானில் மீண்டும் இரண்டு மைனர் சிறுமிகள் கடத்தப்பட்டு துப்பாக்கி முனையில் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
பதானின், ஜரீப் நகரில் சொந்தக்காரர்களான இரண்டு மைனர் சிறுமிகள் கடத்தப்பட்டு 5 பேர் கொண்ட கும்பலால் துப்பாக்கி முனையில் பலாத்காரம் செய்யப்பாடுள்ளனர்.
கடந்த வருடம் இதே போன்று ஒரு சம்பவம் நடைபெற்று, அதன் ஈரம் கூட காயாத நிலையில் அதே பகுதியில் மீண்டும் இந்த சம்பவம் நடைபெற்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அங்கு ஆட்சியில் இருப்பவர்கள் மற்றும் சட்ட, ஒழுங்கின் மீது பெரும் நம்பிக்கையின்மையை ஏற்படுத்தியுள்ளது.
குற்றம்சாட்டப்பட்டுள்ள ஐந்து பேரில், இரண்டு சகோதரர்கள் அந்த சிறுமிகளை துப்பாக்கி முனையில் கடத்தி சென்றுள்ளனர். ஏதோ ஒரு வேலைக்காக அவர்கள் வீட்டை விட்டு வெளியே வந்த சமயத்தில் இந்த கடத்தல் நடைபெற்றதாக, காவல்துறை அதிகாரி சமித்ரா யாதவ் தெரிவித்துள்ளார்.
இந்த அக்கிரமத்தில் ஈடுபட்டவர்களை கிராமத்தினரே சிறை பிடித்தனர். பின்னர் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். "இரண்டு சிறுமிகளும் மீட்கப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்" என்று அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் இதே பகுதியில், 14 மற்றும் 15 வயதான இரண்டு சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டு, தூக்கில் தொங்கவிடப்பட்ட சம்பவம் நினைவிருக்கலாம்!