பெங்களூரு குண்டு வெடிப்பு சம்பவம்: முக்கிய தீவிரவாதிகள் 2 பேர் கர்நாடகாவில் கைது
பெங்களூரு: பெங்களூரு சர்ச் தெரு பகுதியில் கடந்த மாதம் 28ம் தேதி நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக முக்கிய தீவிரவாதிகள் இருவர் கர்நாடகாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெங்களூரு, எம்.ஜி.ரோடு பகுதியிலுள்ள சர்ச் தெருவில் கடந்த மாதம் 28ம்தேதி குண்டு வெடித்ததில், சென்னையை சேர்ந்த பவானி தேவி என்ற 38 வயது பெண்மணி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் மூன்று பேர் காயமடைந்தனர்.
இந்த சம்பவத்தில் தீவிரவாத இயக்கங்களுக்கு தொடர்புள்ளதாக தேசிய புலனாய்வு ஏஜென்சி தெரிவித்திருந்தது. இதைத்தொடர்ந்து தீவிரவாதிகளின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டன.
கர்நாடக மாநிலம் உத்தரகனரா மாவட்டத்திலுள்ள பத்கல் என்ற நகரில் 2 தீவிரவாதிகள் பதுங்கியுள்ளதாக பாதுகாப்பு ஏஜென்சிக்கு தகவல் கிடைத்துள்ளது. இதைத்தொடர்ந்து இன்று பிற்பகல் அவ்விரு தீவிரவாதிகளும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் பெயர் முகமது ஆசிப் மற்றும் சதாம் என்று தெரியவந்துள்ளது.
பெங்களூரு அழைத்துவந்த அதிகாரிகள், பெங்களூரு போலீசாருடன் இணைந்து தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். இருவருமே இந்தியன் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
அவர்களிடமிருந்து டெட்டனேட்டர்கள், டைமர்கள் போன்ற வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இவை அனைத்தும் தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.