உத்தரகாண்ட்: தனி மாநிலப் போராட்டக்காரர்களுக்கான இட ஒதுக்கீட்டு மசோதா வாபஸ்!
டேராடூன்: உத்தராகாண்ட் தனி மாநிலம் கோரி போராடியவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதாவை அம் மாநில அரசு திரும்பப் பெற்றுக்கொண்டது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருந்து உத்தரகாண்ட் பிரிந்து தனி மாநிலமாக அமைவதற்காகப் போராடியவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதா அம் மாநில சட்டசபையில் வெள்ளிக்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது.
அந்த மசோதா மீதான விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய மாநில எதிர்க்கட்சித் தலைவர் அஜய் பட், பாரதிய ஜனதா எம்.எல்.ஏ. மதன் கெளசிக் ஆகியோர் இட ஒதுக்கீட்டுக்கான சட்டம் சபையில் நிறைவேறுவதற்கு முன்பு தனி மாநிலம் கேட்டு போராடியவர்களை அடையாளம் கண்டு, சட்டத்தின் வரம்புக்குள் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
உறுப்பினர்களுக்குப் பதிலளித்து, மாநில சட்டசபை விவகாரத் துறை அமைச்சர் இந்திரா ஹிருதயேஷ், உறுப்பினர்களால் கூறப்பட்ட திருத்தங்களுடன், அடுத்த கூட்டத்தொடரிலோ, அல்லது இந்தச் சட்டத்தை நிறைவேற்றுவதற்காகக் கூட்டப்படும் சிறப்புக் கூட்டத்தொடரிலோ புதிய மசோதா தாக்கல் செய்யப்படும் என்றார்.
இதைத் தொடர்ந்து அந்த மசோதா திரும்பப் பெற்றுக்கொள்ளப்பட்டது.